சசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்
சசிகலா, டிடிவி தினகரனை கே.பி. முனுசாமி கடுமையாக விமர்சித்தார்.
சென்னை: "தினகரன், சசிகலா ஆகியோர் வந்தேறிகள். அவர்களால் அதிமுகவை அழிக்க முடியுமா" என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கேபி. முனுசாமி பேசினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. மிகக் கடுமையாக சசிகலா, தினகரனை விமர்சித்தார். ஒருமையில் பேசினார்.
பாமகவை கூட்டி வந்தவர்
அதிமுக அணிக்கு பாமக வர முக்கியக் காரணம் முனுசாமிதான் என்று கூறப்படுகிறது. இவர்தான் டாக்டர் ராமதாஸை வலியுறுத்தி அதிமுக பக்கம் திருப்பி விட்டவர் என்று பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
சசி, தினகரன் மீது பாய்ச்சல்
இந்த நிலையில் திருவாரூர் நிகழ்ச்சியில் சசிகலா, தினகரன் மீது கடுமையாக பாய்ந்துள்ளார் கே.பி. முனுசாமி. மிகக் கடுமையான வார்த்தைகளில் அவர்களை விமர்சி்தார்.
அதிமுகவை அழிக்க முடியுமா
கே.பி.முனுசாமி பேசும்போது, "அதிமுக எனும் குடும்பத்தை சசிகலா, தினகரனால் அழிக்க முடியுமா? அவர்கள் வந்தேறி கூட்டம்.... திமுகவை விட மோசமான கம்பெனி இவர்கள். கருணாநிதியாவது அரசியல் ரீதியாக நமக்கு எதிரி. ஆனால் சசிகலா ஜெயலலிதாவிற்கு பணி செய்வதற்காக வந்த வேலைக்காரி.
ஜெயலலிதா ஒதுக்கினார்
அவர்கள் போட்ட திட்டத்தை புரிந்து கொண்டதால் சசிகலாவை குடும்பத்துடன் ஒதுக்கி வைத்தார்.பின் சீட்டில் உட்காந்த சசிகலா முன் சீட்டில் உட்காந்தார். அதிமுக தொண்டன் விழித்து கொண்டான்.
அவர்கள் துரோகிகள்
துரோகிகளை வெளியேற்றினோம்.19 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்றால் தினகரனும் சசிகலாவும் அரசியல் அனாதைகளாக மாறுவார்கள்" என்றார்.