"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி!
சென்னை: 10 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது என்றும், நாளை தேர்தல் என்று சொன்னால் கூட குறைந்தது 100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் PTK 2026 தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறினார். மேலும் 4 முனை போட்டி நிலவும் நிலையில் எங்களுக்கு எல்லா கூட்டணி கட்சிகளின் கதவுகளும் திறந்து உள்ளன. எங்களுக்கு செல்வாக்கு உள்ள 7 மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறன்றன. திமுக கூட்டணியில் 5-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதிமுகவில் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று தெரிகிறது.
நாதக சார்பில் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. தவெக தரப்பிலும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் - சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்ட நிலையில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகள் கிடைக்காததால் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராஜபாளையம் தொகுதியிலும், சியாம் கிருஷ்ணசாமி திருநெல்வேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 2026 சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடாது. கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறோம். எல்லா சூழலுக்கும் தயாராக இருக்கிறோம்.
10 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. நாளை தேர்தல் என்று சொன்னால் கூட குறைந்தது 100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமியின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications