Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உட்கட்சி சிக்கலை தீர்க்க முடியாம திணறுவது தெரியுது”.. எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்த கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உட்கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் தவறில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது.

Krishnaswamy Slams EPS for Using Deceased Leaders to Tackle Party Troubles

உட்கட்சி சிக்கல்

ஆளுங்கட்சியை எதிர்த்து பேச எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து பேசியுள்ளார். டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி உட்கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதை அவர் அரசியல் ரீதியாகத்தான் கையாள வேண்டும். பெயர் வைப்பதில் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய பேச்சை எடுப்பதன் அவசியம் என்ன? ஒரு தரப்பு ஆதரவு கிடைத்தபோதும், மற்றொரு தரப்பு எதிர்க்கத்தான் செய்யும்.

பலிகடா ஆக்க வேண்டாம்

உங்கள் கட்சிக்குள் தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சனையை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். ஆனால் மறைந்த தலைவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம்." எனப் பேசியுள்ளார்.

திமுக அரசு

தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "மதுரையை சேர்ந்த மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் கேட்டரிங் ஆர்டர் கொடுத்தவருக்கு பணம் கொடுக்காமல் சாதி குறித்து பேசியுள்ளார். அவரை கட்சியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் அதிகமாக சாதியை தூண்டும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசுகின்றனர்.

18 லட்சம் பேர் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். அரசு இயந்திரத்தை வைத்திருக்கும் அரசு, நான்கரை ஆண்டுகளாக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் ஆறு மாதத்தில் எப்படி தீர்க்க முடியும்? இதனால் மக்கள் மனம் மாறுவார்கள் எனச் சொல்ல முடியாது. 2026 தேர்தல் நாளுக்கு நாள் சிக்கலாக உள்ளது. தெளிவான அரசியல் சூழல் ஏற்படாமல் தெளிவற்ற நிலைக்கு தான் செல்கிறது.

தவெக உடன் கூட்டணி?

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்தால் தான் ஏழை மக்களுக்கு உதவ முடியும். ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு. ஜனவரி 7-ல் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்போம். ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பை பிரதானமாக கருதி எங்கள் கூட்டணி அமையும். நாங்கள் தற்போது நடுநிலையாக இருக்கிறோம். 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களின் பிரதான நோக்கம். நாங்கள் வெற்றி பெற வேண்டும், சட்டப்பேரவைக்கு செல்லவேண்டும்.

தவெக புதிதாக அரசியல் களத்தில் நுழைந்துள்ள இயக்கம். அவர்கள் நாளுக்கு நாள் தங்கள் செல்வாக்கை அதிகரித்து வருகின்றனர். அதை இன்னும் பன்மடங்கு அதிகமாக்குவார்களா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தவெகவை கணித்த பிறகே முடிவெடுப்போம். கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்பதில் யாரையும் புறந்தள்ளமாட்டோம். தவெகவையும் கணக்கில் கொண்டே எங்கள் அரசியல் உத்தியை வகுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பேசியது

அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி "தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். தனது சொத்துகளை சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வலியுறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், அண்மையில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தபோது முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்ததாகவும் கூறினார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதற்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+