ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: கே.எஸ்.அழகிரி வார்னிங்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமது வரம்புகளை மீறி செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அண்மையில் நியமிக்கப்பட்டார். நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்த போது அம் மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
ஆனால் ஊழலை ஒழிக்க தாம் அரசு நிர்வாகத்தில் தலையிட்டது சரிதான் என ரவி விளக்கம் அளித்திருந்தார். ஆகையால் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அறிக்கை கேட்ட ஆளுநர்
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்புவிடம் ஆளுநர் ரவி அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்த நிலையில் இந்த அறிக்கை கேட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆளுநரின் இந்த தலையீட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநருக்கு உரிமை இல்லை
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது: தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு, தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

பாஜகவை காலூன்ற திட்டமா?
இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்றச் செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 1968 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயலாகும்.

கடும் விளைவுகள் ஏற்படும்
ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க., தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications