தமிழக காங். புதிய தலைவராக பொறுப்பேற்றார் அழகிரி… செயல் தலைவர்களும் பதவியேற்பு
சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ் அழகிரி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்பியான கே.எஸ் அழகிரியை கடந்த 2ம் தேதியன்று அன்று நியமித்தார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ் அழகிரி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக எம்.எல்.ஏ. வசந்த குமார், ஜெயகுமார், மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம், விஷ்ணு பிரசாத் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
நிகழ்ச்சியின் போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், குமரி அனந்தன், கே.வி தங்கபாலு, கிருஷ்ணசாமி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி, மாணவர் பருவம் முதல் காங்கிரசில் ஈடுபட்டவர். அவர் ஊராட்சி ஒன்றியப் பெருந் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராக இருமுறையும், லோக்சபா உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications