வைரமுத்துவிற்கு விளக்கம் தர வாய்ப்பு அளிக்க வேண்டும்.. குஷ்பு கருத்து
வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என்றும், வைரமுத்துவிற்கு விளக்கம் தர வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார். அப்போது, மீ டூ விவகாரம் மற்றும் கமலின் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சு குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டது.

வந்தால் வரவேற்போம்
அதற்கு பதிலளித்த குஷ்பு, "கமல் வந்தால் வரவேற்போம். திமுகவுடன் கூட்டணி உடையும் என்று கமல்தான் சொல்கிறார். அது அவரது கருத்தாக இருக்கலாம். அதேபோல் கூட்டணி வைக்க ரெடி என்றும் அவரேதான் சொல்கிறார். காங்கிரஸ் சார்பில், திமுகவுடன் கூட்டணி முறிவு என்றோ கமலுடன் கூட்டணி என்றோ சொல்லவில்லையே.. அதனால் கமல் எங்களிடம் வந்தால் நிச்சயம் வரவேற்போம்" என்றார்.

நடிகைகள் தவறானவர்களா?
பிறகு மீ டூ புகார் குறித்த கேள்விக்கு, "படுக்கைக்கு மறுத்ததால் சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சில நடிகைகள் கூறுகின்றனர். அப்படியெனில், அந்த படங்களில் நடித்த நடிகைகள் தவறானவர்களா? என கேள்வி எழுகிறது.

பாலியல் தொல்லை
எனவே, புகார் கூறுவதற்கு முன்பு யோசித்து பேச வேண்டும். பெயரை மட்டும் வெளியே சொல்லி, ஒருவரை குற்றம் சொல்லாமல், சட்ட ரீதியாகவும் அந்த பிரச்சனையை அணுக வேண்டும். நான் 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறேன். ஆனால், பாலியல் தொல்லைகளை சந்திக்கவில்லை.

வைரமுத்துவுக்கு வாய்ப்பு
மீ டூ இயக்கம் தேவைதான். வைரமுத்து பற்றி சின்மயி புகார் கூறியுள்ளார். ஆனால், அதேசமயம், வைரமுத்துவிற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications