நடிகை குஷ்புவுக்கு எதிராக பாஜகவில் வெடிக்கிறதா மோதல்?மூத்த நிர்வாகியின் நள்ளிரவு ட்வீட்டால் சர்ச்சை!
சென்னை: நடிகை குஷ்புவை பாரதிய ஜனதா கட்சியில் சேர்த்துக் கொண்டதை அந்த கட்சியின் சீனியர் தலைவர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை போல. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
நடிகை குஷ்பு இஸ்லாமியர் என்பதால் பாரதிய ஜனதா கட்சியினரால் மிக கடுமையாக இழிவாக விமர்சிக்கப்பட்டார். அதுவும் குஷ்பு கற்பு தொடர்பாக முற்போக்குத்தனமாக பேசியபோது அவரை பந்தாடிவிட்டனர் சங்க பரிவாரங்கள்.
இதனால் கண்ணீரும் கம்பலையுமாக மன்னிப்பு கேட்டார் குஷ்பு என்பது கடந்த காலம். அத்துடன் காங்கிரஸில் ஐக்கியமானது முதலே பிரதமர் மோடியையும் பாஜகவையும் இடைவிடாமல் விமர்சித்து திட்டி தீர்த்துவந்தார் குஷ்பு. பாஜகவுக்கு தாவும் ஒருவாரத்துக்கு முன்பு கூட பிரதமர் மோடியை வெளுவெளுவென வெளுத்திருந்தார் குஷ்பு.
முதல்நாள் ஷாக்.. 2ம் நாள் சர்ச்சை.. 3ம் நாளில் போலீஸ் ஸ்டேஷன்.. குஷ்பு மீது பாயும் சரமாரி புகார்கள்!
நான் பெரியாரிஸ்ட்
அதே குஷ்புவைத்தான் பாஜக இப்போது சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் குஷ்புவின் கொள்கைப் போக்குகள் மாறவில்லை. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அமர்ந்து கொண்டு ஆமா நான் பெரியாரிஸ்ட்தான் என பிரகடனம் செய்கிறார். பெண்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதை கொள்கையாக கொண்ட மனுதர்மத்தை பின்பற்றும் பாஜக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பெண்கள், தலித்துகள் ஒடுக்கப்படுவதை விமர்சித்து பேசுகிறார்.
அடிப்படை கட்டமைப்பே இதுதான்
குஷ்புவின் இந்த பேட்டியைப் பார்க்கும் மனுதர்ம ஆதரவாளர்கள், சங்க பரிவாரங்களில் நீண்டகாலம் கடுமையாக உழைத்துப் பணியாற்றியவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் ஆதங்கம் இருக்கத்தான் இருக்கும். மனுதர்மத்தை எரித்த அதே தமிழ் மண்ணில் மனுதர்ம நீதிப்படித்தான் நாங்கள் கட்சி நடத்துவோம்; வழி நடப்போம் என அறிவித்துவிட்டு அரசியல் கட்சியை நடத்துவது எவ்வளவு பெரிய சவாலான பணி என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அந்த மனுதர்ம சிந்தனை, பெரியாரிய எதிர்ப்பு மீதுதான் தமிழகத்தில் பாஜக இப்படி ஒரு ஆகக் குறைந்தபட்ச கட்டமைப்பையே கொண்டிருக்கிறது.
ஒரிஜனல்களுக்கு கோபம்
இதையும் சல்லி சல்லியாக நொறுக்குவது போல் குஷ்பு பேசுவது நிச்சயம் உண்மையாக ஒரிஜனல் அக்மார்க் பாஜக தொண்டர்களை கொந்தளிப்படையத்தான் செய்யும். இதனை வெளிப்படுத்தும்விதமாக பாஜகவின் மூத்த நிர்வாகியும் செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி ஆங்கில மேற்கோள் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு மறைமுகமான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
— Narayanan Thirupathy (@Narayanan3) October 13, 2020 |
நாராயணன் திருப்பதி அப்செட்?
குஷ்புவுக்கு ஆதரவாக இப்போது நாராயணன் திருப்பதி போன்றவர்கள் டிவியில் பேசுகிறார்கள். ஆனாலும் பாஜகவின் அடிப்படை சித்தாந்தங்களை உயிர்மூச்சாக கொண்டவர் என்பதால் நாராயணன் திருப்பதியால் குஷ்புவின் பேச்சுகள் எதனையும் ஜீரணிக்க முடியாமல் இப்படி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் என்கிற வகையிலான கருத்துகள் அந்த பதிவில் குவிந்தும் வருகின்றன.