தாராபுரத்தில் எல்.முருகன், ஆயிரம் விளக்கில் குஷ்பு, விருத்தாச்சலத்தில் பிரேமலதா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்று பாஜகவின் எல்.முருகன், குஷ்பு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான பாஜக தலைவர் எல்.முருகன், குஷ்பு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி விஐபிக்கள் அதிகளவு வசிக்கும் தொகுதியாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ,கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வசிக்கும் பகுதிகள் ஒட்டுமொத்தமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் வரும். ஆயிரம் விளக்கு தொகுதி ஸ்டாலினின் கோட்டை என்பது திமுகவினருக்கு தெரிந்த உண்மை. அங்கு யாரை நிறுத்தினாலும் திமுக வெற்றிபெறும் என்பது ஸ்டாலினின் கணக்கு. கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்தவரும் தற்போதைய பாஜகவை சேர்ந்தவருமான கு.க.செல்வம் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர் தான்.

வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆயிரம் விளக்கில் போட்டியிடும் நிலையில் அதிமுக பாஜக வசம் இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், பாஜக வேட்பாளராக குஷ்பு சுந்தர், அமமுகவை சேர்ந்த வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தான் சமர்ப்பித்த ஆவணங்கள், குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று தேர்தல் அலுவலர் மத்தியில் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட குஷ்பு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவருடன் தற்போது ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க. செல்வம் உடனிருந்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இதையோட்டி தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11.15 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் பவண்குமார் கிரியப்பனவரிடம் மனுவை அளித்தார். டெபாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை 5 மற்றும் பத்து ரூபாய் என தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெற்ற பணத்தை வழங்கினார்.

மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தாராபுரம் தொகுதியில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வாக்கு வித்தியாசத்தை நாங்கள் பார்க்கிறோம். தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் தாராபுரத்தின் மேம்பாடு ஆகியவை தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
2006இல் விஜயகாந்த் தனித்து நின்று வென்ற விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட தற்போது வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். பிரேமலதா விஜயகாந்தின் 52வது பிறந்தநாள் என்ற நிலையில், பிறந்தநாள் அன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, கிராமங்கள் வரை கிளை கழகங்கள் அமைந்துள்ள கட்சி தேமுதிக. 243 தொகுதிகளிலும் தேமுதிக பலமாக உள்ளது என்று கூறினார். எங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி என்று மே 2ஆம் தேதி தெரியவரும் என்றும் கூறினார்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியிலும், அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட இன்று தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதே போல எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத்குமார் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications