பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்வு.. தமிழக அரசு எடுக்கும் முடிவு? கோட்டைக்கு கோரிக்கை
சென்னை: வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வழிகாட்டி மதிப்பு என்பது நிலவிவகாரங்களில் மோசடிகளை தடுக்கவும், அந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதேபோல, பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முயல்பவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது.. இதனால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எளிதாக தடுக்க முடியும்..

விற்பனை பத்திரம்: இந்த வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த போவதாக தமிழக அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரையும், பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தார்.
வழிகாட்டி மதிப்பு: இதற்குபிறகு, திடீரென வழிகாட்ட மதிப்பு உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே வழிகாட்டி மதிப்பு மாற்றப்படவில்லை என்று பதிவுத்துறை உடனடியாக இதற்கு பதில் தந்திருந்தது.. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தார்.
அதில், அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை, குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், tnreginet.gov.in என்ற பதிவுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றுகூறி தெளிவுபடுத்தியிருந்தார்.
மறுபரிசீலனை: இந்நிலையில், வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து, வணிக அமைப்பு மாநிலப்பொதுச்செயலாளர் கோவிந்த ராஜுலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் மூலமாக தெரிய வருகின்றது.
ஆன்லைன் வர்த்தகம்: வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், மூலப்பொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, பணப் புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்களால் தொழிலும், வணிகமும் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த காலக் கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும்.
வருவாய் வரி: அரசுக்கான வரி வருவாய் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழக முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications