களை கட்டியது தீபாவளி.. நாடு முழுவதும் கோலாகலம்.. கடைசி நேர வியாபாரம் ஜோர்
சென்னை: தீபாவளி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. நாளை தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் இப்போதே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டனர். கடைசி நேர வியாபாரமும் ஜோராக களை கட்டியுள்ளது.
தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடை எடுப்பது, பலகாரங்கள் தயார் செய்வது, பட்டாசு வாங்குவது என்று மக்கள் பிசியாகி விட்டனர்.
விடிந்தால் தீபாவளி என்பதால் கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர். கடைசி நேர வியாபாரம்தான் கன ஜோராக இருக்கும் என்பதால் கிட்டத்தட்ட மொத்த தேசமும் படு பிசியாக இருக்கிறது.
ஊர்களுக்குப் படையெடுப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு மாவட்ட மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்களில் 75 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்குப் போய் கொண்டாடுவது வழக்கம். இதனால் ரயில்கள், பஸ்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன.
ஆட்டோ, டூவீலர்
சென்னையிலிருந்து சற்று அருகாமையில் உள்ள குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு டூ வீலர்கள், ஆட்டோக்கள், டெம்போக்களிலும் மக்கள் படையெடுத்து சென்றவண்ணம் உள்ளனர்.
நிறைந்து வழியும் ஜிஎஸ்டி சாலை
இதன் காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலை நிறைந்து வழிகிறது. ஜிஎஸ்டி சாலை முழுவதும் வாகனங்களாக காட்சி தருகிறது. ஆயிரக்கணக்கில் விதம் விதமான வாகனங்கள் விரைந்தோடி வருவதால் டோல் கேட்டுகள் ஸ்தம்பித்துப் போய்க் காணப்படுகின்றன. கூடுதல் பணியாட்களை வைத்து டோல் வசூலித்து வருகின்றனர்.
விமானங்களும் ஃபுல்
சென்னையிலிருந்து ஊர்களுக்குப் போக, பஸ், ரயில் கிடைக்காத பலர் விமானங்களைப் பிடித்து ஊர்களுக்குப் பறந்து வருகின்றனர். இது சமீப ஆண்டுகளாக பழக்கமாகி வருகிறது. இதனால் விமானங்களும் கூட தற்போது நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடைசி நேர விற்பனை ஜோர்
அனைத்து ஊர்களிலும் கடைசி நேர வியாபாரம் படு சூடாக உள்ளது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கால் வைக்க முடியாது. அப்படி ஒரு கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல புறநகர்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாலையோர கடைகளில் வியாபாரம் படு ஜோராக நடக்கிறது. மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
பட்டாசு விற்பனைதான் டல்
ஆனால் பட்டாசு விற்பனைதான் டல்லாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பெரிய வெடிகளை வெடிக்கக் கூடாது. 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். இதனால் வெடி வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் விற்பனையும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் நாடு ஒவ்வொரு வகையிலும் தீபாவளியைக் கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.