சாதாரண குற்றம் இல்லை.. ஞானசேகரனுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது.. வழக்கறிஞர் அஜிதா வரவேற்பு!
சென்னை: "இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு, இந்த குற்றங்களைச் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கும். நீதிமன்றம் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளது" என வழக்கறிஞர் அஜிதா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை வழக்கறிஞர் அஜிதா வரவேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் மீண்டும் கைது செய்தனர். ஞானசேகரன் மீதான வழக்கில் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியாகும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று தண்டனை விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கறிஞர் அஜிதா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு சரியான கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு, அதனை அப்பா அம்மாவுக்கு அனுப்பிவிடுவேன், கல்லூரியை விட்டு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளதால் இது கடும் குற்றம்.
பாலியல் வன்கொடுமை குற்றம் மட்டுமல்லாமல், பல்வேறு குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதால் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பல நேர்வுகளில் தவறு செய்து, கொலை குற்றம் உள்ளிட்ட குற்றங்களைச் செய்தவர்களுக்கு அவர்களின் நன்னடத்தையின் காரணமாக அவர்களது தண்டனை குறைக்கப்படலாம். ஒருவரை பழிவாங்க வேண்டுமென்றோ. கொடுமையாக நடத்தவேண்டும் என்றோ சிறையில் போடுவதில்லை. தவறை புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையான விஷயம்.
அந்த அடிப்படையில் கூட, ஞானசேகரனின் தண்டனையை குறைக்கக்கூடாது என்பதுதான் இந்த தீர்ப்பின் முக்கியமான விஷயம். இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு, இந்த குற்றங்களைச் செய்ய நினைப்பவர்களுக்கு இது முக்கியமான தண்டனையாக பாடமாக இருக்கும். நீதிமன்றம் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications