தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு லாட்டரி மார்ட்டின் சார்பில் வக்கீல் நோட்டீஸ்!
சென்னை: லால்குடி சட்டசபை தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு மார்ட்டின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின், தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளரான லீமா ரோஸ் மார்ட்டின் குறித்து தவெக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கடுமையாக விமர்சித்திருந்தார். "எடப்பாடி பழனிசாமி அதிமுகவை லீமா ரோஸ் மார்ட்டினிடம் விற்றுவிட்டார். அவர் மீது ஒரு வழக்கு, இரண்டு வழக்கு அல்ல. அவர் மீது வழக்கு போடாத மாநிலமே கிடையாது. எல்லா மாநிலங்களிலும் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஒன்றே ஒன்றை கேட்கிறேன். நாங்கள் எல்லோரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான்.
இந்தியா முழுவதும் தம்முடைய லாட்டரி சீட் ஆதிக்கத்தை நடத்திய மார்ட்டினை இந்தியாவிலேயே கைது செய்து சிறையில் போட்டவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிடக் கூடாது. லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் தடை செய்தார்கள். அப்படிப்பட்ட அந்த நபருடைய மனைவியை அதிமுக வேட்பாளராக போட்டிருக்கிறார் என்று சொன்னால், உண்மையிலேயே அவருக்கு அதிமுக மீது பற்று இருக்கிறதா? அம்மாவின் மீது பாசம் இருக்கிறதா? மார்ட்டின் மனைவிக்கு தேர்தலில் அதிமுகவில் சீட்டு வழங்கி மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர எடப்பாடி முயற்சிக்கிறாரா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், லால்குடி சட்டசபை தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு மார்ட்டின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை மார்ட்டின் - லீமா ரோஸ் மார்ட்டினின் மகனும், லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள பதிவில், "எனது குடும்பத்தை குறித்து பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி, எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, லால்குடி தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் அவர்களுக்கு எதிராக, எனது தந்தை மார்ட்டின் சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்நோட்டீஸில், பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும், ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவல்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், 15 நாட்களுக்குள் இந்திய சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் கு.ப. கிருஷ்ணன் மீது வழக்குத் தொடரப்படும் என தெரிவித்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications