எழுதிக் கொடுப்பதை வாசிப்பதுதான் உங்க கடமை.. ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்
சென்னை: தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு உரிமை இல்லை. எழுதிக் கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் ஜனநாயகக் கடமை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது என்று கூறி சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.

ஆளுநர் ரவி பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தபோது பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவரை வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆளுநர் திடீரென அவையில் இருந்து வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது
கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். அதற்கு முதல்வர் மற்றும் பேரவைத் தலைவர் இருவரும் மறுத்ததால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே 2023, 2024 ஆம் ஆண்டில் ஆளுநர் உரையின்போது அரசு தயாரித்த உரையில் இல்லாத தகவல்களை சேர்த்தும், தவிர்த்தும் வாசித்ததால் அப்போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினின் வெளியிட்ட பதிவில், ''கடந்த ஆண்டுகளில் அரசின் உரையில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர், இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழக மக்களையும், அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா'' என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன.
தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற சட்டப்பேரையில் சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது, ஆளுநர் இருக்கும்போது பதாகை ஏன் காட்டினீர்கள் என்று அதிமுகவினரிடம் கேள்கி எழுப்பினார். தொடர்ந்து, ஆளுநர் உரையை டிடி பொதிகை நேரலை செய்ய அனுமதிக்காதது குறித்து பேசுகையில், ஆளுநர் உரையை டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி ஒட்ட முயற்சி நடந்தது.
வெட்டி, ஒட்டுவார்கள் என்று முன்கூட்டேய கண்டுபிடித்துதான் பொதிகைக்கு நேரலை தரப்படவில்லை. 3 நிமிடங்கள் ஆளுநர் அவையில் இருந்தார். அதற்குப் பிறகு அவர் வெளியேறிவிட்டார். பொதிகைக்கு நேரலை கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. பொதிகை மூலம் நினைத்ததை நடத்த முடியவில்லை என்பதால் ஆளுநர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள் மற்றும் பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அரசியலமைப்பின்படி அமைச்சரவை எழுதிக் கொடுத்த தீர்மானத்தை வாசிப்பது மட்டும்தான் ஆளுநரின் ஜனநாயகக் கடமை.
தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்க வைக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications