"லியோ" சர்ச்சை:நடிகர் விஜய்க்கு சசிகலா திடீர் அதிரடி ஆதரவு? சினிமாவுக்கு "ரெட் அலர்ட்" என பாய்ச்சல்!
சென்னை: லியோ படத்தை திரையிடுவதில் பல்வேறு சர்ச்சைகள் சுழன்று அடித்து வரும் நிலையில் இப்பட விவகாரத்தை குறிப்பிடாமல் "தமிழ் சினிமாவுக்கு ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளதாக சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த "லியோ" திரைப்படம் திரையிடப்படுவதில் சிக்கல்கள் தொடருகின்றன. இசைவெளியீட்டு விழா தொடங்கி சிறப்பு காட்சிகள் வரை பல்வேறு பஞ்சாயத்துகளை லியோ திரைப்படம் எதிர்கொண்டு வருகிறது.
லியோ திரைப்படம் தொடர்பாக இன்று அதிகாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ட்வீட் குறித்து இருவேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவுக்கு ரெட் அலர்ட்: இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, லியோ பட விவகாரச் சூழலில் அதனை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவின் நிலை குறித்து விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்து சசிகலா கூறியதாவது: சினிமா தொழில் இன்னைக்கு என்ன ஆகிட்டிருக்கு? மழை காலத்துல மழை வருது, புயல் வருதுன்னு சொன்னா, ரெட் அலர்ட் கொடுப்பாங்க.. இப்ப சினிமா துறைக்கு 'ரெட் அலர்ட்' இருக்கு. அது என்ன? அப்படின்னு கேட்டீங்கன்னா யாரும் படம் எடுக்க முடியலை.
"அவங்க கிட்ட' படம் கொடுக்கனும்: உங்க மாதிரி யங்ஸ்டர்ஸ் படம் எடுக்க முடியலை. புதுசா இந்த ஃபீல்டுக்கு வந்து நமக்கு திறமை இருக்கு.. நம்ம ஒரு டைரக்டர் ஆகலாம்னா இப்ப எல்லாம் ஆக முடியாது. காரணம் என்னான்னா.. யாரும் படம் எடுத்து உங்க பேரை போட்டு படம் பண்ண முடியாது. அதுக்கு 'இவங்களே' இருக்காங்க. அதனால யாராக இருந்தாலும் படம் எடுக்கிறவங்க 'அவங்க' கிட்ட கொடுத்துடனும்...

"லியோ"வுக்கான குரலா: அதே மாதிரி படம் எடுக்கிற புரடியூசருங்க.. யாராச்சும் சொல்ல சொல்லுங்க.. ஜெயலலிதா அரசாங்கத்தில் இருந்தப்ப சினிமா தொழில் இருந்ததையும் பாருங்க.. இப்பவும் பாருங்க. .(அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு லியோ படம் குறித்தா என கேள்வி கேட்டார்) நான் பொதுவாக சொல்றேன்.. ஏன் நான் ஒரு படத்துக்காக சொல்லப் போறேன்? பொதுவாக இதுதான் நடக்குது இந்த அரசாங்கத்தில இதுதான் நடக்குது..

ப்ளாக் டிக்கெட் கூட "அவங்களே" விற்பனை: எங்க பார்த்தாலும் ஒன்னு படத்தை அவங்க கிட்ட கொடுக்கனும்.. அவங்களே ஆளை போடுவாங்க... அவங்களே விநியோகம் பண்ணுவாங்க.. ப்ளாக் டிக்கெட்டை அவங்களே விப்பாங்க.. அப்ப போலீஸ்காரங்க எப்படி கன்ட்ரோல் பண்ண முடியும்? இதுதாங்க நடந்துகிட்டு இருக்கு.. இதெல்லாம் வெளியில சொல்ல முடியாது.. சொன்னாலும் நீங்க போடுறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கு கூட செய்தியை போடலாம்னு எண்ணம் இருக்கலாம்.. ஆனால் மேனேஜ்மென்ட் ஒத்துக் கொள்ளனுமே. அவங்கவிட்டாதானே நீங்க இந்த செய்தியை போட முடியும்... அதனால்தான் நான் மக்கள் கிட்டயே சொல்லிகிட்டு வந்துடுறேன்.. இவ்வாறு சசிகலா கூறினார்.












Click it and Unblock the Notifications