ஓபிஎஸ் எங்க வேணா போகட்டும்.. ஆனா வெற்றி எங்களுக்கு தான்.. ‛‛பாயிண்டை’’ பேசிய மாஜி அமைச்சர் தங்கமணி
சென்னை: அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் எங்கு சென்றாலும் நியாயயம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக ஐகோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது'' எனக்கூறிய எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணி முக்கிய பாயிண்டையும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக அணியாக பிரிந்தனர். ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு களேபரத்துடன் முடிவடைந்தது.
அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் 11ல் நடந்த பொதுக்குவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் பங்கேற்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு
இந்நிலையில் தான் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இது ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வும் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தங்கமணி பேட்டி
இந்த தீர்ப்பு என்பது ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளாரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பத்தரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வெற்றி எங்களுக்கே
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு எங்கு சென்றாலும், நியாயம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணையவில்லை. அமமுகவில் இருந்து தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இணைகின்றனர்'' என்றார்.

பொதுச்செயலாளராக எடப்பாடி
மேலும் ‛‛வரும் காலங்களில் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்'' எனவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். இதன்மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக மாற்ற உள்ளதாக அவர் முக்கிய பாயிண்டை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications