சபாநாயகர் செயல் தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் முறையிடுவோம்... தங்க தமிழ்ச்செல்வன்
சென்னை: சபாநாயகர் செயல் தொடர்பாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஒரு எம்எல்ஏ-வை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். கடிதம் மூலமாகவோ, நேரிலோ 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி மற்றும் அமமுக ஆதரவு 3 எம்எல்ஏக்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார். சபாநாயகரை, அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்த நிலையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்.. தமீமுன் அன்சாரி உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்?
அதிமுக கொறடாவின் பரிந்துரையின் பேரில், எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், சபாநாயகர் தனபால் பாரபட்சமாக செயல்படுவதால் அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கலைச்செல்வன் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று கூறிய தங்க தமிழ்செல்வன், அதிமுக, பாஜக தோல்வி அடைவது உறுதியாகி விட்டது என்றும், நான்கு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பதற்கு அதுவே காரணம் என்றும் குற்றம்சாட்டினார். அதிமுக குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.