இது ஒரு நாடுதானா என அரசியமைப்பு சபையை கூட்டி விவாதிக்கலாமா? தைரியம் இருக்கா? -பொங்கிய திமுக பிரமுகர்
சென்னை: இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டே வெளியேறலாம் என உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறி இருக்கும் நிலையில், இந்த கருத்தினை உங்களது கட்சித் தலைமை சொல்வதற்கு தைரியம் இருந்தால், நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டோம் என திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். இந்திக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியை விரும்பாதவர்கள், அனைவரும் வெளிநாட்டவர்களாகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளுடனோ உறவு வைத்திருப்பவர்களாக கருதப்படுவார்கள். மாநில மொழிகள் மதிக்கப்படுகின்றன. ஆனால் முதலில் இந்திக்குதான் முக்கியம். அதன் பிறகுதான் மாநில மொழி. இந்தி பேச முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்." என்று கூறினார்.

உத்தரப்பிரதேச அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கண்டங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ட்விட்டரில் காட்டமான பதிவை எழுதி இருக்கிறார். அதில், "இந்த பாரதிய ஜனதா கட்சி மந்திரிக்கு தெரிய வேண்டும். உத்தரபிரதேசதிலே ரேஷன் கடைகளிலே உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் பேசக்கூடிய மக்களின் வரிப்பணம் தேவைப்படுகிறது.
அப்படி இந்தி மொழியை கற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்ற கருத்தினை உங்களது கட்சித் தலைமை சொல்வதற்கு தைரியம் இருந்தால், நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டோம். உங்கள் பிரதம மந்திரி அவர்களுக்கும் உங்களது கட்சித் தலைமைக்கும் அந்த தைரியம் இருக்கிறதா? மறுபடியும் அரசியலமைப்பு சபை கூட்டி இந்த நாடு ஒரு நாடு தானா என்பதை விவாதிக்கலாமா அல்லது இந்தக் கூற்றெல்லாம் அதானிக்கு நாட்டை எழுதி கொடுப்பதற்கு திசைதிருப்புவதற்காக நடத்தப்படும் கோமாளிக்கூத்தா?" எனக் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications