பாஜக பிரமுகர் வாடகை கடையும்.. வயிற்றுக்குள் தங்கமும்! கலங்கடித்த கடத்தல்! சில்லிட்ட சென்னை ஏர்போர்ட்
சென்னை: சென்னை விமான நிலையத்தில், பாஜக பிரமுகர் வாடகைக்கு விட்ட இடத்தில் பரிசு பொருள் கடை வைத்தார் யூடியூப்பர் ஒருவர். ஏர்போர்ட்டுக்கு வரும் கடத்தல் தங்கத்தை வாங்கிக் கொண்ட இந்த கடை ஊழியர்கள், ஒவ்வொரு முறையும் பலத்த பாதுகாப்பை மீறி வெளியே வந்தது எப்படி என்பது தெரியுமா? அயன் சினிமா பார்ட் 2 எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு, சர்வதேச கடத்தல் கும்பல்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் விறுவிறுப்பாக இருந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் என்பது இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. தாம்பரம் டூ சென்னைக்கு போகும் டவுன் பஸ் போல் எங்காவது ஒரு விமானம் போய்கொண்டே இருக்கும். சில சமயம் ஒரே நேரத்தில் ஏராளமான விமானங்கள் சென்று கொண்டே தான் இருக்கிறது. அதிகாலையில் கூட ஓய்வே இருக்காது. இதற்கு மேல் முடியாது குருநாதா என்பது போல் விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி வருகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருவதும் செல்வதுமாக இருப்பார்கள். இங்கு உள்நாட்டு விமான முனையத்தை பொறுத்தவரை பெரியதாக எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் சர்வதேச விமான நிலைய முனையத்தில் இருந்து பயணிகள் வெளியே வர வேண்டும் என்றால் மிகவும் பலத்த சோதனைக்கு பிறகே வரமுடியும்.
சுங்க அதிகாரிகள், அயன் படத்தில் வருவது போல் தீவிரமாக சோதித்த பின்னரே பயணிகளை வெளியே விடுவார். அந்த அளவிற்கு மிகவும் கடுமையான சோதனை நடைபெறும் விமான நிலையமாக சென்னை சர்வதேச விமான நிலையம் இருக்கிறது.
அப்படிப்பட்ட விமான நிலையத்தில் சர்வதேச கடத்தல் கும்பல், ஒரு கடையை திறந்து அதற்கு 8 பேரை வேலைக்கு போட்டு தங்கத்தை கடத்தி இருக்கிறார்கள். தங்கத்தை கடத்துவது சென்னை விமான நிலையத்தில் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சென்னை விமான நிலையத்தை விட்டு தங்கம் வெளியே போவது என்பது ஒரு நாட்டின் எல்லையில் பலத்த ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆவதற்கு சமம். அது சாத்தியமே இல்லை அல்லவா? ஆனால் சாத்தியப்படுத்தி உள்ளது சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்த சர்வதேச கடத்தல் கும்பல் தேர்வு செய்ததும், அவர்கள் தங்கத்தை கடத்திய விதமும், இன்னொரு முறை சூர்யாவை வைத்து அயன் பார்ட் 2 படமே எடுக்கலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. மங்காத்தா பட பாணியும், அயன் பட பாணியும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்.. அப்படி இருக்கிறது நிலைமை..
சர்வதேச கடத்தல் கும்பல் யூடியூபரான சபீர் அலி என்பவரை யூடியூப் வீடியோவில் பார்த்துள்ளது. ஷாப்பிங் தொடர்பான வீடியோக்களை போட்டு வந்துள்ளார். அவரை தங்கக்கடத்தலுக்கு தேர்வு செய்தது. தங்கம் கடத்துவது எளிதான விஷயம் இல்லை என்பதால், அதற்காக சென்னை விமான நிலையத்திலேயே அவர்களை தங்க வைக்க விரும்பியது சர்வதேச கடத்தல் கும்பல். அதற்கான ரூட்டை தேடிய கும்பல், அங்கு ஏதாவது ஒரு கடையை திறப்பது தான் சரியானதாக இருக்கும் என்று நினைத்தது.
அடுத்ததாக சென்னை விமான நிலையத்தில் கடைகளுக்கு இடத்தை வாடகைக்கு விடும் நிறுவனமான வித்வேதா பிஆர்ஜியின் நிர்வாக இயக்குநரான பிருத்வியை அணுக முடிவு செய்தது. இந்த பிருத்வி யார் என்றால், தமிழ்நாடு பாஜக இளைஞரணியின் முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மற்றும் பல பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. தங்க கடத்தலுக்கு பயிற்சி பெற்ற யூடியூபர் மற்றும் அவரது சகாக்களுகு பரிசு பொருள் கடை வைத்து தர வேண்டும் என்று அணுகி உள்ளது சர்வதேச கடத்தல் கும்பல். இதற்கான 70 லட்சம் லீஸ் தொகையை சபீர் அலிக்கு சர்வதேச கடத்தல் கும்பல் வழங்கி உள்ளது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏர்ஹப் என்ற கடையை நடத்துவதற்காக தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சபீர் அலிக்கு விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதிக்குள் இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார் பிருத்வி. யூடியூபரான சபீருக்கு பரிசு பொருள் கடை நடத்திய எந்த அனுபவமும் இல்லை.. ஆனாலும் கடை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முக்கியமான பகுதியில் தங்க கடத்தல் கும்பல் தாங்கள் நினைத்தது போலவே பரிசு பொருள் கடையை பெயருக்கு திறந்துள்ளது.
அதை வைத்து விமான நிலையத்தின் வழியாக இரண்டு மாதங்களுக்கு மேலாக பலமுறை தங்கத்தை கடத்தி உள்ளது. தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் பயணிகள், தங்கத்தை கழிவறை வழியாக ஏர்ஹப்பில் உள்ள பரிசு பொருள் கடை ஊழியர்களிடம் ஒப்படைப்பார்களாம். அவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே கடத்துவதற்காக அதை தங்கள் மலக்குடலில் மறைத்து வைப்பார்களாம். சென்னை விமான நிலையத்தில் கடை வைத்துள்ளவர்கள் என்பதால் அவர்களிடம் வெளியே செல்ல பாஸ் இருக்கும். அத்துடன் கடை வைத்திருக்கும் காரணத்தால் சோதனையில் சிக்காமல் தப்பி வந்துள்ளார்கள்.
சுமார் 267 கிலோ தங்கம் கடத்தும் வரை சென்னை விமான நிலையத்தில் சர்வதேச கடத்தல் கும்பலின் வியூகம் வெளியாகிவல்லை. ஆனால் ஜூன் 27ம் தேதி பயணி ஒருவரின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகம் அவரை சிக்க வைத்தது. அந்த பயணி தான் பரிசு பொருள் கடையை காட்டிக்கொடுத்தார். அதன் பிறகே சபீர் அலி மற்றும் அவரது சகாக்களின் தங்க கடத்தல் வேட்டை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரித்வி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) இரண்டு மூத்த அதிகாரிகளின் வீடுகளிலும், பிருத்வியின் வீட்டிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிருத்வி தற்போது இந்தியாவில். அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக வருவதாகவும் அவரது குடும்பத்தினர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்கள்.
ஏர்ஹப் பரிசு பொருள் கடையில் வேலை செய்த அனைத்து ஊழியர்களும் தங்கத்தை மலக்குடலில் (உடலின் பின்பகுதி வழியாக நுழைத்து) மறைத்து தங்கம் கடத்த பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவலை யூடியூபர் சபீர் அலி சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஏர்ஹப் கடையில் அல்லது விமானம் வந்திறங்கும் பகுதியில் உள்ள M1 மற்றும் M2 கழிப்பறைகளில் தங்கத்தை ஒப்படைப்பார்கள். கடை ஊழியர்கள் தங்கத்தைப் பெற்று தங்கள் மலக்குடலில் மறைத்து விமான நிலையத்திற்கு வெளியே கடத்துவார்கள் என்று சபீர் அலி கூறியிருக்கிறார்.
எந்த அனுபவமும் இல்லாத யூடியூபர் சபீர் அலிக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை விமான நிலையத்தில் 10,000 சதுர அடி இடத்தில் பரிசு பொருள் கடையை மிக விரைவாக அமைக்க பிருத்வி உதவி செய்துள்ளார். பிருத்விக்கு ஏர்போர்ட்டில் இடம் கிடைக்க அவரது பாஜக தொடர்புகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications