வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே! உற்சாக இபிஎஸ்! யாரை நம்பி நான் பொறந்தேன்! சோக கீதம் பாடும் ஓபிஎஸ்
சென்னை : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், உற்சாகத்தில் இருக்கிறது அவரது தரப்பு.. தர்மயுத்தத்திற்கு பின் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர் செல்வத்தை வென்றே வந்திருக்கிறார். இன்று நடக்கும் பொதுகுழுவில் அவர் ஒற்றைத் தலைமையாய் தேர்தெடுக்கப்பட இருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி ஒற்றைத் தலைமை வரை ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நடந்த போட்டா போட்டி குறித்து தற்போது பார்க்கலாம்..
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை, கட்சியின் அடிப்படை விதிகளை திருத்தவும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி இன்று நடைபெற இருக்கிறது.
இபிஎஸ் கைக்கு செல்கிறதா அதிமுக?.. என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்..
ஒற்றைத் தலைமை தொடர்பாக விதிகளை திருத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, பொதுக்குழுவை நடத்தவும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனஉயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை
இதனால் கட்சியில் இரட்டை தலைமையை ஒழித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்வதோடு ஒற்றைத் தலைமையை அதாவது அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட இருப்பது 100% உறுதியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை செல்ல நேர்ந்தது இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதுதான் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது.
எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி
அப்போது இருந்து இப்போது வரை கட்சியில் தன்னை முக்கிய முகமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-க்கு எதிராக பெற்ற வெற்றிகள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அப்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக எதிர்த்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூவத்தூர் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பின்னர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் பேசு பொருளாக இருந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
கடும் பரபரப்புக்கு இடையே சட்டப்பேரவையில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். அவருக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் என இருப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதுதான் எடப்பாடி ஓபிஎஸ்க்கு எதிராக பெற்ற முதல் வெற்றி.
அணிகள் இணைப்பு
பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்தன. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் ஓபிஎஸ் கூறினார். கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு சசிகலாவை கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
முதல்வர் வேட்பாளர்
நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, முன்னதாகவே அதிமுகவில் மறைமுகமாக இருந்த பிளவு வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியது. அது ஆட்சி நிறைவடைய தொடங்கிய போது, கூட்டணி, வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்களில் நேரடியாக தெரிந்தது. முதல்வராக இருந்த எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், அதனை வெளிப்படையாக எதிர்த்தார் ஓபிஎஸ். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென வலியுறுத்தினார்.
2வது வெற்றி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 3 முறை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுவாரா? என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தை, மூத்த நிர்வாகிகள், அப்போதைய அமைச்சர்களின் லாபி காரணமாக அக்டோபர் 7ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என ஓபிஎஸ்ஸே கூறினார்.
எதிர்கட்சி தலைவர் பதவி
தேர்தல் முடிவுகள் வெளியாகி அதிமுக ஆட்சியை இழந்த நிலையில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலம் கடந்தபோதிலும், அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிசாமிக்கும் இடையில் கடும் போட்டி நிலவிய சூழலில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக சட்டமன்ற கூட்டம் கூடியது. அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக மே 10ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது எடப்பாடிக்கான 3வது வெற்றி.
பொதுச்செயலாளராக தேர்வு?
அதன்பின்னர் பல நேரங்களில் முட்டல் மோதல்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனக்கான ஆதரவு வட்டம் கட்சியில் அதிகம் இருப்பதை உணர்ந்து கட்சியின் ஒற்றை தலைமையை உருவாக்க வேண்டும் என நினைத்தார். அதனை செயல்படுத்தும் விதத்திலேயே அவரது தரப்பு மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னெடுத்தனர். அதிலும் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில்தான் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மகிழ்ச்சி பொங்க அழைப்பு விடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிலும் அவர் தான் வெற்றி பெறப் போகிறார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு 4வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.