சனாதனம் பற்றி பேசினால் கழுத்தை அறுப்போம்.. கமலை மிரட்டிய நடிகர் ரவிச்சந்திரன் மீது புகார்
சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் விழா கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த விழாவில் சனாதனம் பற்றி பேசிய கமல்ஹாசனை கழுத்தை அறுப்போம் என்று மிரட்டிய ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அகரம் பவுண்டேஷன் நடத்தி வருகின்றனர். இதன்மூலம் ஏழை, எளிய மக்களை படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் கடந்த 3ம் தேதி அகரம் பவுண்டேஷன் விழா நடந்தது.

'அகரம் பவுண்டேஷன்' 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைப்பதையொட்டி இந்த விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் பங்கேற்றார். அவர் மேடையில் பேசினார். அப்போது சனாதன தர்மம் பற்றி கருத்து தெரிவித்தார்.
கமல்ஹாசன்பேசும்போது, ‛‛இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க முடியாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட முடியுமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது. ஏனென்றால் 2017க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடங்க முடியவில்லை. இப்போது புரிகிறதா? ஏன் நீட் வேண்டாம் என்கிறோம் என்று.. 2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த சட்டம்.
இந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. இது சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான். இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது.ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும்'' என்று பேசியிருந்தார்.
இதற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும், ஓய்வு பெற்ற ஐஜியுமான மவுரியா தலைமையில் அந்த கட்சியினர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில் கமல் ஹாசனின் கழுத்தை அறுப்பதாக நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர்.
நடிகர் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்து வருகிறார். இதுதவிர சன்டிவியில் வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியின் அப்பாவாகவும், ஜீ தமிழில் இதயம் சீரியல் உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
குறிப்பாக இந்து மதம் பற்றி விமர்சனம் செய்வோரை கடுமையாக சாடி வருகிறார். மேலும் இவர் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரையும் விமர்சனம் இதற்கு முன்பு விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications