தீபாவளி பண்டிகைக்கு பஸ்ஸில் ஊருக்கு போறீங்களா?.. அப்ப முதல்ல இதை படியுங்கள்!
சென்னை: தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் 13-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன.
சென்னையில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே கே நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளை பிரித்து இயக்குவதற்கும் நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகள் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புதுவை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.