லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா?
புதுச்சேரி: ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சி, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறது. என்.டி.ஏ கூட்டணியில் லஜக இடம்பெறக்கூடாது என ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், லஜக கட்சிக்கு தர்பூசணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி இடம்பெறுவதற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் இந்த சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறது. தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக 10, அதிமுக 2, லட்சிய ஜனநாயக கட்சி-2 என பாஜக திட்டமிட்டது.
இதில் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தினார். லட்சிய ஜனநாயக கட்சி சேர்த்தால் வெளியேறுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி கட்சி சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த இருவருக்கு சீட்டு வழங்கப்படும். அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. இதையும் ரங்கசாமி ஏற்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். நேற்று இரவு டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசியத் தலைவர் நிதின் விபின் ஆகியோர் உடன் புதுச்சேரி தலைவர்கள் பேசினர். இதையடுத்து, பாஜக தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் பேச உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் லட்சிய ஜனநாயக கட்சிக்கு தேர்தல் ஆணையம், தர்பூசணி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. "தர்பூசணி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியதைத் தொடர்ந்து, புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட புத்துமாரியம்மன் கோயிலில், தர்பூசணியைப் படைத்து வழிபாடு செய்தார் எல்.ஜே.கே தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதால், லட்சிய ஜனநாயகக் கட்சி 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அக்கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications