ரிசல்ட்.. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. பதிவான வாக்குகள் இன்று எப்படி எண்ணப்படுகின்றன தெரியுமா?
இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன
சென்னை: நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.. இந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன என்பதை பார்ப்போம்,.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தன.
6-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின... 2-ம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணிக்கு இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகின்றன.
ஊரக உள்ளாட்சி தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை.. 74 மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
வாக்கு சீட்டு
பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில்தான் இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.. மொத்தமுள்ள 4 பதவிக்கும் 4 கலர்களில் ஓட்டு சீட்டு அச்சடித்து வழங்கப்பட்டிருந்தது.. இந்த சீட்டில்தான் வாக்காளர்கள் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போட்டனர்.. இந்த பெட்டிகள் இப்போது வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
எண்ணிக்கை
8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதுமே, முதல் பெட்டிகள் இருக்கும் ரூம் சீல் உடைக்கப்பட்டு, அங்கிருந்து ஓட்டு பெட்டிகள் பொதுக்கூடத்துக்கு எடுத்துவரப்படும்.. வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் அந்த பெட்டியில் உள்ள ஓட்டுகள், மற்றொரு பெரிய பெட்டியில் போடப்படும்.. பிறகு, அதிலிருந்து 50-50 சீட்டுகளாக அடுக்கி வைப்பார்கள்.
நிறங்கள்
இதையடுத்து, இந்த சீட்டுக்கட்டுகளை இன்னொரு ரூமுக்கு கொண்டு செல்வார்கள்.. அங்கு கட்டுகளை பிரித்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கான மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டு, ஒன்றிய உறுப்பினருக்கான பச்சை நிற சீட்டு, பஞ்சாயத்து தலைவருக்கான இளம் சிவப்பு நிற சீட்டு, பஞ்சாயத்து உறுப்பினருக்கான வெள்ளை நிற சீட்டு என்று தனித்தனியாக அதாவது கலர் வாரியாக பிரிப்பார்கள்.
தனித்தனி கட்டுகள்
அப்படி பிரிக்கப்பட்ட சீட்டுகளை 50-50 ஆக பிரித்து மறுபடியும் அடுக்கி ஒவ்வொன்றாக கட்டுவார்கள்... ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கும் ஓட்டுகளை எண்ணுவதற்கு தனித்தனியாக ரூம்கள் உள்ளன.. அங்கு அந்த ஓட்டு சீட்டுக்கள் பதவிகள் வாரியாக கொண்டு செல்லப்படும்... அதை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஓட்டுக்கள் எண்ணும் பணி நடக்கும்.. ஒவ்வொரு கட்டுகளையும் பிரித்து அதில் யாருக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது என்பதை பார்த்து, அவைகளை வேட்பாளர் வாரியாக தனித்தனியாக பிரித்து வைப்பார்கள். அதன்பிறகுதான் அவை எண்ணப்படும்.
நிறைய ஓட்டுக்கள்
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர் பதவியை பொறுத்தவரை ஒவ்வொரு பதவிக்கும் நிறைய ஓட்டுக்கள் விழுந்துள்ளன.. ஒரு லட்சம் ஓட்டுக்களில் இருந்து ஒன்றரை லட்சம் வரை ஓட்டுக்கள் உள்ளன.. அதனால், அவையெல்லாம் எண்ணி முடித்து முடிவுகள் அறிவிக்கவே நிறைய நேரம் ஆகும்.. அதேமாதிரி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் இருக்கின்றன.. இந்த 2 பதவிகளுக்கான ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதற்கு நாளை பிற்பகல் ஆகி விடும் என்கிறார்கள்.. அதனால் மாலைதான் முன்னிலை நிலவரங்கள் தெரிய வரும்.
முடிவுகள்
ஆனால், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஓட்டுக்கள் இருப்பதால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அடுத்த ஒருசில மணி நேரத்திலேயே அந்த முடிவுகள் தெரிய வரும்... அதாவது காலை 10 மணிக்கெல்லாம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரியவந்துவிடும்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களின் விவரங்களும் தெரியவரும்... எனினும் இறுதி முடிவு மாலைதான் அறிவிக்கப்படும்.
அலுவலர்கள்
வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் அந்தந்த அறை மேற்பார்வையாளர் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்படும்... அவர் வட்டார பார்வையாளரிடம் வழங்குவார். அந்த விவரங்கள் மாவட்ட பார்வையாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அனுப்பி வைக்கப்படும்... அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் மைக் மூலம் அறிவிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
குளறுபடிகள்
இதில் சில குளறுபடிகளும் நடந்துள்ளன.. மொத்தம் 4 ஓட்டுகள் போட வேண்டும் என்பதால் வாக்காளர்கள் குழம்பி விட்டார்கள்.. 4 சீட்டுகளிலும் தனித்தனியாக இந்த ஓட்டுகளை பதிவு செய்வதற்கு பதிலாக, சிலர் ஒரே சீட்டில் 4 ஓட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.. மேலும் சிலர், ஒன்றிரண்டு சீட்டுகளில் மட்டும் முத்திரை குத்தி விட்டு, மற்ற சீட்டுகளை கையோடு எடுத்து சென்றும் விட்டனர்.. இப்படி நிறைய குழப்பங்கள் இந்த முறை நடந்துள்ளது.. அதனால், இந்த முறை நிறைய செல்லாத ஓட்டுக்களும் பதிவாக வாய்ப்புள்ளது...