உள்ளாட்சி தேர்தல்.. ஏலம் விடும் நடைமுறைக்கு தேர்தல் ஆணையம் தடை
சென்னை: நடந்து முடிந்த தேர்தல்களில் ஊராட்சி தலைவர், வார்டு மெம்பர் போன்ற பதவிகளை ஊர் நிர்வாகம் ஏலம் விட்டு யார் அதிகம் பணம் தருகிறாரோ அவரை அன்னபோஸ்டாக தேர்வு செய்வதை காலங்காலமாக சில கிராமங்களில் பின்பற்றி வந்தார்கள். அந்த நடைமுறைக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 2019ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்தல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் ஏற்கனவே தொடங்கி விட்டது.

மக்கள் ஆர்வம்
வேட்புமனு தாக்கல் வரும் செப்.22-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை மிக ஆர்வமுடன் தாக்கல் செய்து வருகினறனர்.

தேர்தல் ஆணையம் தடை
இந்நிலையில் இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை
மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்று கூறி உள்ளது. ஏற்கனவே தடை உள்ளது என்றாலும் சில கிராமங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications