குட் நியூஸ்.. தாம்பரம் டூ செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தின் வேகம் அதிகரிப்பு.. இனி சர்ர்ன்னு போகலாம்!
சென்னை: தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதையின் வேகம் 80 கிமீ இருந்து 100 கிமீ வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மற்றும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கும் ரயில் துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடடா.. ரயில் நிலைய கழிவறைக்கு 12% ஜிஎஸ்டி! 2 பிரிட்டிஷ்காரர்களிடம் ரூ.224 வசூல்! ஐஆர்சிடிசி விளக்கம்
வேகம் அதிகரிப்பு
சென்னையின் புறநகர்ப் பகுதியை சென்னை மாநகருடன் இணைப்பதில் புறநகர் ரயில்களின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதை கடந்த 2021 முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 37 கி.மீ கொண்ட இந்த பாதையை அமைக்க சுமார் 3 ஆண்டுகள் வரை தேவைப்பட்டது. இது பயன்பாட்டிற்கு வந்தபோது இந்த வழித்தடத்தில் ரயில்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.
கோரிக்கைகள்
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரிக்கப்பட்டு 80 கி.மீ அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் 100 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதற்கு பயணிகள் பலரும் வரவேற்பளித்துள்ளனர். ஆனால், அதேநேரத்தில் சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
கூடுதல் அம்சங்கள்
அதாவது, இந்த மூன்றாவது வழித்தடத்தில் அமைந்துள்ள நடைமேடைகளில் பயணிகள் மழைநீரில் நனையாமல் இருக்க மேற் கூறை, போதுமான மின் விளக்கு வசதி, நடைமேம்பாலங்கள், மேலும் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும், அதாவது பயண நேரத்தை 40 நிமிடங்களாக குறைக்க வேண்டும், அதேபோல சாலை மேம்பாலங்களையும் அமைக்க வேண்டும், கூடுதல் ரயில்கள் இயக்கம் என டிவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
பதில்
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும், விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெற்கு ரயில்வே பதிலளித்துள்ளது. மேலும், சாலை மேம்பாலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வராது என்றும் பதில் டிவிட்டில் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை தவிர்த்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர். அதாவது, குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு அம்சங்கள்
இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இந்த பிரச்னை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாவது பாதையில் வேகத்தை அதிகரித்ததற்கும், இந்த பிரச்னைக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிவிட்டர் பயனர், இது பொறுப்பற்ற பதில் என்றும், வேகம் அதிகரிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளும் அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் அச்சம் குறித்து அறிந்திருக்கிறோம் அதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும் ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது.
அதேபோல ரயில் தாமதம், குறிப்பிட்ட நிலையங்களில் நின்று செல்லாதது குறித்த புகார்கள் தொடர்ந்து மேலெழுந்தன. இதனையடுத்து, அதற்கும் ரயில்வே நிர்வாகம் பதிலளித்திருந்தது.