அடேங்கப்பா! இன்னா ஜனம்- டாஸ்மாக் கடையில் மட்டுமில்லை.. சென்னை ரிச்சி தெருவிலும்!
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் முழு லாக்டவுன் அமலாக்கப்படும் நிலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை பகுதியான சென்னை ரிச்சி தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் சென்னை, காஞ்சிபுர, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமலில் இருக்கும் இன்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த லாக்டவுன்களைப் போல அல்லாமல் இம்முறை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் 6.0 : சென்னைவாசிகளே அவசியம் இல்லாமல் வெளியே வராதீங்க - காவல்துறை
அனைத்து இறைச்சி கடைகள் மூடல்
சென்னையில் ஜூன் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூடவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த இறைச்சி கடைகளில் லாக்டவுனை மீறி பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெருமளவு கூடிவிடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் முன்கூட்டியே இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலை. விடுதிகள்
மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருப்பதால் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் வரும் 30-ந் தேதி வரை மூடப்படுகிறது. இதனையடுத்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதிகளை கொரோனா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக் கழக விடுதியை தங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் அலைமோதிய கூட்டம்
இப்படி அரசு ஒரு பக்கம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னொருபக்கம் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை இப்போதே வாங்கி வைக்க கடைகளில் அலைமோதுகின்றனர். லாக்டவுன் அமல்படுத்தப்படுவால் மதுபான கடைகளும் இழுத்து மூடப்படுகின்றன. இதனால் குடிகாரர்கள், மதுபானங்களை ஸ்டாக் வாங்கி வைப்பதில் தீவிரம் காட்டியதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ரிச்சி தெருவிலும் கூட்டம்
இதேபோல் சென்னையில் எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யபடுகிற, சர்வீஸ் செய்யப்படுகிற ரிச்சி தெருவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருந்து பணிசெய்ய நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதனால் லேப்டாப்கள் உள்ளிட்டவைகளை புதியதாக வாங்கவும் சர்வீஸ் செய்யவும் ரிச்சி தெருவில் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தில் சமூக இடைவெளியை எங்கே தேடி கண்டுபிடிப்பதாம் என்கிற நிலைமைதான் இருந்தது.