14 சீட் பேரம் உதாருதான் மாமே.. ஒரே ஒரு ராஜ்யசபா சீட்.. சிக்னல் கொடுத்த இபிஎஸ்.. ஓகே சொன்ன தேமுதிக!
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் 3 லோக்சபா தொகுதி பிளஸ் 1 ராஜ்யசபா சீட்டுக்கு தேமுதிக தலைமை ஒப்புக் கொண்டுவிட்டதாம். அதிமுகவுடன் இனி தேமுதிக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் இணக்கமாக இருந்த கட்சிகள் திகைத்துப் போயின. லோக்சபா தேர்தலில் எந்த கட்சியின் கூட்டணியில் இணைவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன சில கட்சிகள். அண்ணா திமுகவுடனும் எந்த கட்சியுடன் உடனே கை கோர்க்க முன்வரவில்லை. தற்போதைய நிலையில் புரட்சி பாரதம் கட்சி மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

பாமகவின் இரட்டை நிலை: அதிமுக, பாஜக இரண்டில் எது என்பதை முடிவெடுக்க முடியாமல் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் கட்சிகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பாமகவைப் பொறுத்தவரையில் பாஜகவுடனேயே கூட்டணிக்குப் போகலாம்; எப்படியாவது இந்த முறையாவது அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என நினைக்கிறது. இதனால் பாஜக கூட்டணிக்கே பாமக போகலாம் என்கிறது ஒருதரப்பு. பாஜகவை நம்புவதை விட மத்திய அமைச்சர் பதவியை விட கவுரவமான வாக்குகளாவது வாங்குவோம்; அதற்கு அதிமுக கூட்டணியே மேலானது என்கிறதாம் மற்றொரு தரப்பு.
டீல் ஓகேவாமே: தேமுதிகவுக்கு பாஜக மீதான கோபம் இன்னமும் குறையவில்லையாம். என்னதான் விழுந்து விழுந்து பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்காக உருகினாலும் அப்படி எல்லாம் இறங்கிப் போகிற ஆள் நானில்லை என்பதாகவே கெத்து காட்டுகிறாராம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதனால்தான் 14 லோக்சபா சீட் , 1 ராஜ்யசபா சீட் கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என ஆகாத ஒன்றை உளறி வைத்தாராம் பிரேமலதா. அதே நேரத்தில் எப்படியாவது நாடாளுமன்றத்துக்கு தாம் போய்விட வேண்டும்; அதன் பின்னர் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தால் பாஜக பக்கம் ஓடிவிடலாம் என்ற கணக்கு போட்டுள்ளாராம் பிரேமலதா. இதை புரிந்து கொண்ட அண்ணா திமுகவும் இப்போதைக்கு தேமுதிக வரட்டும்.. அப்புறம் அவங்க முடிவெடுக்கட்டும் என்கிற அடிப்படையில் 3 லோக்சபா சீட், 1 ராஜ்யசபா சீட் தருகிறோம் என உறுதி கொடுக்கப்பட்டதாம். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் பிரேமலதாவிடம் இது பற்றி தெரிவிக்க அப்போதைய சந்திப்பில் பிரேமலதாவும் ஓகே என சொல்லிவிட்டாராம்.
அதிமுக அணிக்கு ஓடும் தேமுதிக: இதனையடுத்தே அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பான அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பு தொடங்குமாம். முதலில் தேமுதிக குழு ஒன்று அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து பேசுவார். இதனைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக்கியது அண்ணா திமுகதான் என்கிற பல்லவிகளுடன் அதிமுக கூட்டணிக்குப் போவதை நியாயப்படுத்துவாராம் பிரேமலதா என்கின்றன அரசியல் வட்டாரங்கள். அதிமுகவுக்கும் தேமுதிகவுக்குமான பகை, தேமுதிகவை அதிமுக உடைத்த கதை எல்லாம் கேட்கப்பட்டால் நடந்தவை நடந்தவையாக் இருக்கட்டும் என எதையாவது சொல்லி சமாளிப்போம் என்கிற முடிவில் இருக்கிறாராம் பிரேமலதா. இந்த முடிவுகளைத் தெரிந்து கொண்டு பாஜக மேலிடம் நெருக்கடி கொடுத்தால் அது பற்றி யோசிப்போம் என்கிற பொடியையும் வைத்து பேசி வருகிறாராம் பிரேமலதா.












Click it and Unblock the Notifications