திமுகவை பழிவாங்க போகிறாரா "பிகே" சிஷ்யர்?காங்கிரஸை அதிமுக பக்கம் தள்ளும் 'பெங்களூர் சதி' நிறைவேறுமா?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றி அதிமுகவுடன் கை கோர்க்க வைப்பதற்காக 'பெங்களூர் சதி' திட்டம் படுவேகமாக அரங்கேறி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என அடித்துச் சொல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக எப்படியும் திரும்ப வந்துவிடும் என்ற பாஜகவின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்தும் போய்விட்டது.

அதிமுக, பாஜக நிலை: அதிமுக தரப்போ, படுஜோராக புதிய கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டுகிறது. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான வலிமையான கூட்டணியில் ஒவ்வொரு செங்கல்லாக உருவுகிற வேலையை தொடங்கி இருக்கிறது அதிமுக. திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளில் இருக்கும் 'அதிமுக' அனுதாபிகள்/ சில பல வழிகளில் அதிமுகவால் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் இப்போது களத்தில் இறங்கி சடுகுடு ஆட்டம் ஆடி வருகின்றனர்.
பிகே சிஷ்யர்: திமுக தரப்புடன் மோதலில் ஈடுபட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய பிகே சிஷ்யர் ஒருவர்தான் இன்றைக்கும் அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரம். அந்த பிகே சிஷ்யர்தான் காங்கிரஸுக்கும் உயிர் கொடுத்து கொண்டிருப்பவர். அப்புறம் என்ன போதாதா?
ஸ்லீப்பர் செல்கள் படுஜோர்: திமுக தம்மை எப்படியெல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்ததோ அதற்கு எல்லாம் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என பிகே சிஷ்யர் தரப்பை தூண்டிவிடுகிறதாம் ஒரு குரூப். காங்கிரஸில் உள்ள 'அதிமுக' ஸ்லீப்பர் செல்கள்தான் இந்த 'பெங்களூர் சதி' வேலையில் படுபிஸியாக இருக்கின்றனராம். பிகே சிஷ்யர் தரப்பை சந்தித்து, அதிமுக- காங்கிரஸ் கூட்டணியின் கடந்த கால வெற்றிகள்; எதிர்காலத்தில் எப்படி எல்லாம் ஆதாயங்கள் என தினுசு தினுசாக பட்டியல் போட்டு கொடுத்து வருகிறதாம். இதை எல்லாம் புரிந்தும் தெரிந்தும் கொண்ட பிகே சிஷ்யர் தரப்பு 5 மாநில தேர்தல் முடியட்டும் என சொல்லி அனுப்பி வைத்ததாம்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைய சாத்தியமா?: ஏனெனில் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவு என்பது இயற்கையான ஒன்றாக உருமாற்றப்பட்டு இருக்கிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி நட்பு என்பது இயல்பான நேசத்துக்குரியதாக பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே முதல்வர் ஸ்டாலின். அந்த மரியாதையை சோனியா குடும்பம் இன்னமும் பெருமிதமாக சொல்லி நெகிழ்கிறதாம். இப்படியான நெருக்கத்தில் எந்த வகையில் விரிசல் ஏற்படுத்த முடியும்? அத்துடன் திமுக- காங்கிரஸ் உறவுக்கு வேட்டு வைப்பது என்பது "இந்தியா" கூட்டணியை சிதறு தேங்காயாக உடைப்பதற்கு சமம். அப்படியான ஒரு சூழ்நிலையில் திமுகவின் இடத்தை அதிமுக எப்படி நிரப்பும்? அதிமுக ஒரு நம்பகமான கூட்டணியாக தொடருமா? என்கிற கேள்விகளுடன் 'ஆராய்ச்சி'யில் இருக்கிறதாம் பிகே சிஷ்யர் தரப்பு.
5 மாநில தேர்தல் முடியட்டும்: அதிமுக- பாஜக கூட்டணி முறிவு என்பது இப்போது தற்காலிகம்தான்; ஆனால் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் லோக்சபா தேர்தல் நேரம் நெருங்கும் போது அதிமுகவை எப்படியும் பாஜக இழுத்து கொண்டு போக அத்தனை வேலைகளையும் செய்யும்; ஆகையால் முதலில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்தும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக இல்லை எனத் தெரிந்தால் பின்னர் 'ஆட்டத்தை' ஆடத் தொடங்கலாம் என்பதும் பிகே சிஷ்யரின் ப்ளானாம். திமுக தலைமைக்கும் இந்த தகவல்கள் பாஸ் செய்யப்பட்டிருப்பதால் எந்த நேரத்திலும் எதனையும் எதிர்கொள்ளவும் தயார் நிலையில் இருப்போம் என்கிற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications