திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட்! ஸ்டாலின் - கமல்ஹாசன் ஒப்பந்தம்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசிய நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்சபா சீட் வழங்கப்பட்டுள்ளது. மாறாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் மக்கள் நீதி மய்யத்துக்கு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக மேற்கொண்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த 2 கட்சிகளும் இதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, வைகோவின் மதிமுகவுக்கு ஒன்று என திமுக தொகுதியை வழங்கி உள்ளது. இருப்பினும் அந்த கட்சிகளுக்கான தொகுதி எது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இன்று மாலையில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மதியம் 1 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து கூட்டணி பற்றி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் சென்றார். கமல்ஹாசனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதன்பிறகு கமல்ஹாசன் , திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 தொகுதியை கேட்க விரும்பியது. ஆனால் திமுக அதனை வழங்க மறுத்துள்ள நிலையில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்க கமல்ஹாசன் முடிவு செய்தார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரேயொரு ராஜ்யசபா சீட் மட்டுமே ஒதுக்கீடு செய்வதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியும் ஒதுக்க முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. அதோடு திமுக - மக்கள் நீதி மய்யம் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் அதில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்க ஒரேயொரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. மாறாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications