விசிகவுக்கு 2 தனித் தொகுதி, நீண்ட கால கோரிக்கை 1 பொதுத் தொகுதி தருமா திமுக? நாளை பேச்சுவார்த்தை!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 8, இடதுசாரிகளுக்கு தலா 2+1 ராஜ்யசபா, மதிமுகவுக்கு 1+1 ராஜ்யசபா , விசிக 2 என்கிற பார்முலாவை முன்வைக்கிறது. இது 2019 லோக்சபா தேர்தலில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகுதி பங்கீடு போன்றதுதான். இம்முறை காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளைக் கேட்பது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 8 தொகுதிகள்தான் அதிகபட்சம் என்கிற நிலையில் திமுக உறுதியாக உள்ளதாம். 2019 தேர்தலில் 9 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வென்றது. அதனால் காங்கிரஸுக்கு 8 தொகுதிகளை இறுதியாக ஒதுக்கலாம் என்பது திமுகவின் நிலைப்பாடாம். அதேபோல பிற கட்சிகளும் கூடுதலாக 1 தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் இணைகிறது.
திமுகவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிட வேண்டும் என்பது இலக்காக இருக்கிறது. இந்த பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மொத்தம் 3 தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்க்கிறது. 2 தனித் தொகுதிகள், 1 பொதுத் தொகுதி என்பது விசிகவின் எதிர்பார்ப்பு. விசிகவைப் பொறுத்தவரையில் பொதுத் தொகுதியை பல ஆண்டுகளாக எதிர்பார்த்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இம்முறையும் திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை பெறுவதற்காக விசிக அழுத்தம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக குழுவினர் நாளை சென்னையில் திமுக குழுவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடுவதையும் வலியுறுத்தக் கூடுமாம். ஆனால் திமுக தரப்பு 2 தொகுதிகளில் 1-ல் தனி சின்னம்; 1-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக் கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications