மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக- பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்து அந்த ஒப்பந்தத்தில் எந்த தகவலும் இல்லை.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களமே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. அதன்படி திமுக 21 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களிலும், கொமதேக, ஐஎம்யூஎல், மதிமுக தலா ஒரு இடத்திலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளும் நேற்றே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. ஆனால் அதிமுக கூட்டணிதான் கடைசி வரை எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்தது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் பெரிய கட்சிகள் ஏதும் இல்லை. இதனால் பாமக, தேமுதிகவை எப்படியாவது வளைத்து போட அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த வகையில் நேற்று நவமி என்பதால் இன்றைய தினம் அதிமுக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினமே திடீர் திருப்புமுனையாக பாமக, பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில்தான் இன்று காலை அந்த கட்சிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாமக, அதிமுகவில் மல்லுக்கட்டி வந்த ராஜ்யசபா சீட் குறித்து பாஜக கூட்டணியில் எந்த தகவலும் இல்லை. தேமுதிகவுக்கு சொன்னது போல், "முதலில் மக்களவை தேர்தலில் ஜெயித்து காட்டிவிட்டு பிறகு மாநிலங்களவைக்கு செல்லலாம் என பாஜக கறார் காட்டியதா" என தெரியவில்லை.
இல்லை மாநிலங்களவை சீட்டே பாமகவுக்கு கிடையாதா என்பதும் தெரியவில்லை. அது போல் இன்று தொகுதி எண்ணிக்கை மட்டுமே கையெழுத்தானது, எத்தனை தொகுதிகள் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. நாளை வேட்புமனு தொடங்கி, 27ஆம் தேதி முடியும் நிலையில் இவர்கள் எப்போது முடிவு செய்வார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
பாமக, வட மாவட்டங்களில் வலிமையாக இருக்கிறது. எனவே வடமாவட்டங்களில் அதிக தொகுதிகளில் பாமக போட்டியிட வாய்ப்புள்ளது. பாஜகவை பொருத்தமட்டில் தென் மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜான்பாண்டியன், ஜி.கே.வாசனுக்கு டெல்டாவிலோ அல்லது தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்க வாய்ப்புள்ளது.
ஒரு வேளை தேமுதிகவும் பாஜக கூட்டணிக்கு வந்தால்தான் அவர்களும் வட மாவட்டங்களை கேட்டால், பாமகவுக்கு சிக்கல் எழும். அவர்கள் வராவிட்டால் எந்த சிக்கலும் எழாது என்றே தெரிகிறது. இன்று சேலத்தில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமாக நடத்தப்பட்டு தொகுதி எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளன. சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் கலந்து கொள்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்து தருமபுரியில் மட்டும் அன்புமணி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு வந்த பாமக, ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.












Click it and Unblock the Notifications