அரசியலும் தெரியாது.. அவரோட உயரமும் தெரியாது.. அண்ணாமலையை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
சென்னை : அண்ணாமலை அரசியல் உண்மைகளையும், தனது உயரத்தையும் கூட அறிந்திருக்கவில்லை என்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் வென்ற கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். திமுக வேட்பாளர் ராஜ கணபதி 5,68,200 வாக்குகளை பெற்ற நிலையில், அண்ணாமலை 4,50,132 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். ஏற்கனவே சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலை, தற்போது லோக்சபா தேர்தலிலும் தோல்வியடைந்திருக்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொங்கு மண்டலத்தில் பாஜக அத்தனை தொகுதிகளிலும் வெல்லும் என்று அண்ணாமலை பேசி வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜக வேட்பாளர்கள் வெல்லவில்லை. கோவையில் 4 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருந்தாலும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணனும் சுமார் 4 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார்.
இதனால் கோவை தொகுதியில் கூட அண்ணாமலையால் புதிய வாக்குகளை பெற முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோவைக்கு பிரதமர் 2 முறை வந்த போதும், பாஜக சீனியர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் அண்ணாமலை தோல்வியை சந்தித்திருக்கிறார். இதனால் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்று சில குரல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் உண்மைகளையும், தனது உயரத்தையும் அறிந்திருக்கவில்லை. அதனால் தான் படுதோல்வி அடைந்துள்ளார்.
சிவகங்கை எம்பியாக பதவியேற்ற பின் முதல் பணியாக சிவகங்கை மற்றும் பொன்னமராவதி பேருந்து நிலையங்களை மேம்படுத்துவேன். அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களையும் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications