லோக்சபா தேர்தல்: அண்ணாமலையின் 'அந்த' 9 தொகுதிகள் இப்படியா தேர்வு? பாஜக ஈஸியா தட்டி தூக்கிடுமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 9 தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதனைத் தொடர்ந்து பாஜகவின் பிரதான இலக்காக இருக்கும் அந்த 9 தொகுதிகள் எவை? யார் வேட்பாளர்களாக இருக்கக் கூடும்? என்கிற விவாதங்கள் களைகட்டிவிட்டன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பணிகளை கடந்த பல மாதங்களாகவே பாஜக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் 30க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தது, முகாமிட்டிருந்தது எல்லாமே சிறப்பு முன்னுரிமை அடிப்படையிலான 9 தொகுதிகளைத்தான்.

அமித்ஷா முதல் நிர்மலா சீதாராமன் வரை: அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது, தென்சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வேலூர் தொகுதியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இடைவிடாமல் நீலகிரி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நீலகிரி தொகுதியை குறிவைத்து பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தினர். அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வருகை தந்து பெருமளவு கடன் உதவிகளை வழங்கி சென்றார். இதேபோல பல மத்திய அமைச்சர்கள் ராமநாதபுரம், திருநெல்வேலி, ஈரோடு என குறிப்பிட்ட பகுதிகளில் முகாமிட்டு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.
எல். முருகன் சொன்னது என்ன?: இந்த தீவிர சிறப்பு கவனம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். அதாவது நாடு முழுவதும் பாஜக 150 தொகுதிகளை தேர்வு செய்து அதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கவனம் செலுத்தி அனைத்து நிலை தேர்தல் பணிகளையும் மேற்கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.
9 தொகுதிகளில் களப் பணி: இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதே இந்த 9 தொகுதிகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணியை மேற்கொண்டது. அதிமுகவிடம் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த 9 தொகுதிகள் பாஜகவுக்குதான் என டெல்லி மேலிடமே முடிவு செய்து தேர்தல் பணிகளைத் தொடங்கியது. இதை அப்போதே அதிமுக ரசிக்கவில்லை.
அண்ணாமலை ஓபன் டாக்: இந்த நிலையில் சென்னையில் நேற்று சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாஜக 5 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறதா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, இல்லைங்க அண்ணா 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என பகிரங்கமாகவே அறிவித்தார் அண்ணாமலை. ஏற்கனவே எல். முருகன் சொன்னதையே தற்போது அண்ணாமலையும் உறுதி செய்திருக்கிறார். இதனால் முதன்மை பட்டியலில் இருக்கும் 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
எந்தெந்த தொகுதிகள்?: பாஜகவின் முன்னுரிமை லிஸ்ட்டில் இருக்கும் 9 தொகுதிகள் இவைதான் எனவும் கூறப்படுகிறது. பாஜகவின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள 9 தொகுதிகளாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, வேலுார், கோவை, ஈரோடு, தென்சென்னை, ராமநாதபுரம், நீலகிரி ஆகியவை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் 9 தொகுதிகள் தேர்வு?: இதில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகள் அப்படியே இடம் பிடித்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் 2019 தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளான கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கோவையில் பாஜக வேட்பாளர்கள் அனைவருமே 2-வது இடம் பிடித்தவர்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதனடிப்படையில்தான் 9 தொகுதிகளை பாஜக முன்னுரிமை கொடுத்துள்ளது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications