திமுக-காங். கூட்டணியை உடைக்க சதி? டிடிவி தினகரனின் நமது எம்ஜிஆரும் "சிவி சண்முகம்" பல்லவியை பாடுதே!
சென்னை: லோக்சபா தேர்தலின் போது திமுக தலைமையிலான மெகா கூட்டணியை எப்பாடுபட்டாவது உடைத்துவிடுவது என அதிமுக, பாஜக கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்டவை இடம்பெற்றன. அப்போதே தொகுதிப் பங்கீட்டை முன்வைத்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும் என செய்திகள் பரபரப்பட்டன. ஆனால் தொகுதி பங்கீடுகளும் சுமூகமாக முடிவடைந்தன; திமுக கூட்டணியும் அமோக வெற்றியை அறுவடை செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இபிஎஸ் கோஷ்டி பிரசாரம்
தற்போது லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் வேலைகளை பாஜக, அதிமுக டீம் செய்ய தொடங்கிவிட்டது. இதனாலேயே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும்; காங்கிரஸ்- அதிமுகவின் இபிஎஸ் அணி கூட்டணி அமைக்கும். அப்போது மேலும் சில கட்சிகளும் கூட்டணியில் இணையும் என்றெல்லாம் இபிஎஸ் கோஷ்டியே செய்திகளை பரப்பிவிட்டது.

சிவி சண்முகம் சொன்னது என்ன?
ஆனாலும் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து இணக்கமும் நட்பும் நீடித்தபடியே உள்ளது. இந்நிலையில் அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் வகையில் பேசியிருந்தார். காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திமுகவுக்கு டெல்லி பாஜக மேலிடம் நெருக்கடி கொடுக்கிறது. ஒருகட்டத்தில் திமுக- பாஜக கூட்டணி உருவாகிவிடும் என்றெல்லாம் சிவி சண்முகம் கூறியிருந்தார்.

சிவி சண்முகத்துக்கு பாஜக எதிர்ப்பு
சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவி சண்முகத்தை பாஜக தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். சிவி சண்முகம், பாஜகவில் சேர்ந்துவிட்டாரோ என கிண்டலடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் விமர்சித்துள்ளார்.

நமது எம்ஜிஆரின் சிவி சண்முகம் பல்லவி
இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நமது எம்ஜிஆர் நாளிதழ் இன்று மனக்கோட்டை கட்டும் திமுக என்ற தலைப்பில் சிறு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், ராகுல் காந்தியின் நடைபயணம் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுகின்றனர். இப்போது கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது; அதற்கு தடுப்பூசி போட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது காங்கிரஸை கேலி செய்கிறது. அதாவது ஜெயலலிதா தொண்டர்கள் பிரிந்து நிற்பதால் திமுக எளிதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது; லோக்சபா தேர்தலிலும் அதேபோல் வெற்றி பெறலாம் என நினைக்கிறது. இதற்கு இடையூறாக இருக்கும் கூட்டணி கட்சிகளை எல்லாம் கழற்றிவிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெல்லலாம் என மனக்கோட்டை கட்டுகிறது திமுக என்பதுதான் நமது எம்ஜிஆர் செய்தி கட்டுரையின் சாராம்சம். மேம்போக்காக பார்த்தால் எதையோ எதற்கு முடிச்சு போட்டிருப்பதாக தோன்றும். ஆனால் திமுக கூட்டணியில் சலசலப்பை, பிளவை ஏற்படுத்துகிற அரசியல் சதியாகவே சிவி சண்முகத்தின் பேச்சும் அதை ஆமோதிக்கும் வகையில் தினகரனின் நமது எம்ஜிஆர் நாளேட்டின் செய்திக் கட்டுரையும் வரிசை கட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications