கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தென்சென்னை- அதிமுகவிடம் தொகுதிகளை இப்பவே கபளீகரம் செய்த பாஜக?
சென்னை: அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அதிமுகதான் தொகுதிகளை தீர்மானிக்கும் என இபிஎஸ் கோஷ்டி முழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் இப்போது வரை இருக்கும் பாஜகவோ, தன்னிச்சையாகவே கோவை, நீலகிரி, நெல்லை, தென்சென்னை உள்ளிட்ட தமக்கு தேவையான தொகுதிகளை எடுத்துக் கொண்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அக்கட்சியின் இரு கோஷ்டிகளில் ஒன்றான இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டது. இதனையே இபிஎஸ் கோஷ்டியின் மாஜி அமைச்சர்களும் கிளிபிள்ளை போல சொல்லி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் இப்படி திட்டவட்டமாக அறிவித்த நேற்று தமிழகத்துக்கு பாஜக அகில இந்திய தலைவர் ஜேபிநட்டா வருகை தந்தார். கோவை, நீலகிரி தொகுதிகளில் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை ஜேபி நட்டா நேற்று தொடங்கினார். அவர் தமது பேச்சில் பழங்குடிகளுக்கு மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் தருவதை பட்டியலிட்டார். அத்துடன் திமுக, காங்கிரஸையும் கடுமையாக சாடினார் ஜேபி நட்ட்டா.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை- நீலகிரி தொகுதிகளை மையமாக வைத்தே பேசினார். குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை தொகுதிகளில் இருந்து பாஜக நாடாளுமன்றத்திற்கு செல்வது புதிதல்ல. இந்தியாவில் பெரு நகரங்கள் வளர்ந்தாலும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளரவில்லை என்றார். மேலும் நீலகிரிக்கான திட்டங்கள், செயல்பாடுகள் என பலவற்றைப் பட்டியலிட்டார் அண்ணாமலை. கோவை பகுதியை திமுக அரசு புறக்கணிக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.
நீலகிரியில் தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடப் போகிறார் என்பது நீண்டகால தகவல். இதற்காகவே நீலகிரியை மையமாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தமிழக பாஜக. இப்போது ஜேபி நட்டாவையும் அழைத்து வந்துள்ளது தமிழக பாஜக. அதேபோல் கோவையைப் பொறுத்தவரையில் சீனியரான சிபி ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடக் கூடும். அதற்காகவே கோவை, நீலகிரியை டார்கெட் செய்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறதாம் பாஜக.
மேலும் நெல்லையில் ஏற்கனவே தாம் போட்டியிட தயார் என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் எப்படியாவது போட்டியிடுவோம் என்ற முயற்சியில் மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறாராம். ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்களோ எப்பவும் சிபிஆர், பொன்னார் என பழைய தலைவர்களுக்கே கொடுப்பதா? இந்த முறை இவர்களில் ஒருவருக்கு பதில் புதியதாக ஒருவரை நிறுத்தலாம் என்கின்றனராம். அதேபோல் தென்சென்னை தொகுதிக்கும் பாஜகவில் முட்டல் மோதல் இப்போதே தொடங்கி இருக்கிறதாம். பிரபல நடிகையை மையமாக வைத்து தென்சென்னை அவருக்குதான் என கூறப்பட்டாலும் அது உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
இப்படி அதிமுகவிடம் இருந்து தன்னிச்சையாக பாஜகவே தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுவது ஒன்றும் புதியதும் அல்ல. கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதே ஆட்டத்தைத்தான் ஆடியது பாஜக. ஆனால் அதிமுக பிடிவாதம் காட்டியதால் பாஜகவின் இந்த ஆட்டம் முழுமை பெறாமல் போனது. இம்முறை எப்படி நடக்கும் என பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications