லோக்சபா தேர்தல்:ராமநாதபுரம்- மோடி; கன்னியாகுமரி- ராகுல் அல்லது பிரியங்கா போட்டி? களைகட்டும் தமிழகம்?
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடக் கூடும் என தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த லோக்சபா தேர்தலின் போதே தமிழகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் வலுத்திருந்தன. இம்முறை மோடி, ராகுல் அல்லது பிரியங்கா காந்தி என தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் களமிறங்கினால் தமிழக தேர்தல் களம் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறும்.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன். பின்னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட திட்டமிட்டிருந்தார் என்பது யூக செய்திகளில் ஒன்று.

1977-ம் ஆண்டு தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் அதிமுகவின் எஸ்டி சோமசுந்தரம் போட்டியிட்டு வென்றார். 1971-ல் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டு எஸ்டிஎஸ் வென்றார். அப்போது சட்டசபை தேர்தலில் வென்ற எம்ஜிஆர் முதல் முறையாக ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அமைச்சரவையில் எஸ்டிஎஸ் இடம்பெற்றார். இதனால் தமது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அவர். இதையடுத்து 1979-ல் தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் இந்திரா காந்தி அம்மையார் போட்டியிட விரும்பியதாக கூறப்படுவது உண்டு. ஆனால் எமர்ஜென்சி கொடுமைகளால் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்திரா காந்தி போட்டியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் முட்டுக்கட்டையாக இருந்தார் என்பது ஊடக செய்திகள். அந்த இடைத் தேர்தலில் காங்கிரஸின் சிங்காரவடிவேலு வென்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியினர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சோனியா காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியில் போட்டியிட்டு வென்ற போதும் இந்த குரல் வெளிப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பகிரங்கமாகவே ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் ராகுல் காந்தி தீவிரமாக பயணம் மேற்கொண்டபோதும் இந்த யூகம் வலம் வந்தது. ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்றார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத் தேர்தலின் போது பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழகத்தில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. லோக்சபா தேர்தலில் தென்மாவட்ட தொகுதி ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தினார் என்பது அந்த ஊடக செய்தி.

தற்போது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும் போட்டியிடுவார்; ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடக் கூடும் என்ற தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. பிரதமர் மோடி ஏற்கனவே போட்டியிட்டு எம்பியான வாரணாசியிலும் போட்டியிடுவார்; ராமநாதபுரத்திலும் போட்டியிடுவார் என கூறப்பட்டு வருகிறது. இப்படி தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிடக் கூடும் என்ற தகவல்களால் தமிழக தேர்தல் களம் களைகட்டக் காத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications