தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்கள் பட்டாளம் தொடர் படையெடுப்பு.. அடுத்ததாக அமித்ஷா நவ.12-ல் வருகை?
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 12-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் திமுக அணியில் இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பல பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கின்றன.

பாஜக வியூகம்
இந்த சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஆகக் குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக உருவெடுக்க முடியாதா? என்பதும் பாஜகவின் ஆதங்கம். இதற்கான திட்டமிடல்களுடன் பாஜக அனைத்துவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சர்கள் வரிசையாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பல்வேறு ஆய்வுகளை நடத்துகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என பொதுவெளிகளில் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

புதிய கல்வி கொள்கை
இந்த அரசு முறை பயணத்தோடு அரசியல் கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்துச் செல்வதையும் மத்திய அமைச்சர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா வில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பங்கேற்றார். அவர் பேசுகையில், தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருவதாக விமர்சித்தார்.

ஜிதேந்திர சிங்
அதேபோல் அண்மையில் சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் "மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" என்ற நிகழ்வில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணு ஆற்றல் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். அவர் பிரதமர் மோடி குறித்து புரிந்து கொள்ள எப்படியான புத்தகங்களை படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அமித்ஷா நவ.12-ல் வருகை?
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா , மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் என தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். தமிழகத்தில் நவம்பர் 12-ந் தேதி நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. அப்போது 2024 லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக பாஜக கட்டமைப்பு தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்தக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications