இளையநிலா எஸ்.பி.பி வாழ்க... நூற்றாண்டின் நாயகன் எஸ்பிபி ஐயா வாழ்க... ரசிகர்கள் முழக்கம்!!
சென்னை: எஸ்பிபி இறுதி ஊர்வலத்தில் கூடியிருந்த ரசிகர்கள், இளையநிலா எஸ்.பி.பி வாழ்க, நூற்றாண்டின் நாயகன் எஸ்பிபி ஐயா வாழ்க. என்று முழக்கமிட்டனர். இது அந்த இடத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதாக அமைந்து இருந்தது.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி நேற்று காலமானார். அவரது உடல் நேற்று நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்டுகடங்காமல் கூட்டம் வந்ததால் அவரது உடல் நேற்று இரவே தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலையும் அவரது பண்ணை இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். முன்பு பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர், அனுமதிக்கப்பட்டது. அங்கும் பிரபலங்கள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
வேத மந்திரங்கள் முழங்க அவரது மகன் இறுதிச் சடங்கு செய்தார். நடிகர் விஜய் நேரில் வந்திருந்து எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்லப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் ''எஸ்பிபி புகழ் வாழ்க'' என்று கோஷமிட்டனர். ''இளையநிலா எஸ்.பி.பி வாழ்க! பாடும் நிலா பாலு வாழ்க!'' ''நூற்றாண்டின் நாயகன் எஸ்பிபி ஐயா வாழ்க'' என்று கோஷமிட்டனர். அவரது உடலைப் பார்த்து அவரது மகன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.