ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்.. கொதித்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில் சாதாரண மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் தர்மபுர ஆதீனம் சென்றுள்ளார். அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆளுநரின் கான்வாய் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் ஆளுநரின் கான்வாய் மீது கருப்பு கொடி வீசும் சம்பவங்களும் நடைபெற முயற்சி நடந்தது. ஆனால் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை
ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் எழுந்துள்ள நிலையில் இன்று மாலைக்குள் ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநரின் பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

ஆளுநருக்கு பாதுகாப்பின்மை
இந்த நிலையில் ஆளுநருக்கு பாதுகாப்பின்மையை கண்டித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கற்கள் வீச்சு
தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

என்ன பதில் சொல்ல போகிறார்?
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications