சிவபெருமான் கூப்பிடறாரு, போறேன்! வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது தெலுங்கானா மாணவி.. கதறிய பெற்றோர்
சென்னை: தெலுங்கானா மாநிலத்தில் 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் இருந்து திடீரென மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான அந்த மாணவி, தான் செல்வதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், "சிவபெருமான் என்னை அழைக்கிறார், நான் அவரைத் தேடிச் செல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவி வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வீட்டைச் சோதனையிட்டபோது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அதில் ஆன்மீக ரீதியான காரணங்களைக் கூறி அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிந்தாலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வேறு சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவி ரூம்
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியின் ரூமையும் அவரது செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்த மாணவி ஒரு இளைஞரை காதலித்து வந்ததும், அதற்கு அவருடைய பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது.
பெற்றோரின் கண்டிப்பால் மனமுடைந்த மாணவி, கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். பெரும்பாலும் தியானம் செய்வதிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்த அவர், திடீரென ஒருநாள் இந்தக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார்.
சிவன் அழைக்கிறார்
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட விரக்தியை மறைப்பதற்காக ஆன்மீக போர்வையில் "சிவன் அழைக்கிறார்" என்று கடிதம் எழுதிவிட்டு அவர் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாயமான மாணவியைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அருகில் உள்ள சிவன் கோவில்களில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
காதல் தோல்வி அல்லது குடும்பக் கட்டுப்பாடு காரணமாக ஒரு இளம்பெண் இத்தகைய விபரீத முடிவை எடுத்து, அதை ஆன்மீகத்துடன் தொடர்புபடுத்தி கடிதம் எழுதியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி எங்கு சென்றார்? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? என்பது குறித்த விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
மனநல பாதிப்பு
ஆனால், இன்றைய சூழலில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கடும் போட்டிகள் இளைஞர்களிடையே பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.. மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சமூகப் போக்கும், எதிர்காலம் குறித்த தேவையற்ற பயமும் அவர்களின் மனநலத்தைப் பாதித்து தனிமைக்குத் தள்ளுகின்றன.. இந்த அழுத்தத்திலிருந்து மீள முறையான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் தற்காலத்தில் மிகவும் அவசியமாகின்றன..
சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு மற்றும் டிஜிட்டல் உலகில் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கும் மனநிலை இளைஞர்களின் நிம்மதியைப் பறிக்கின்றன.. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபடுவது மட்டுமே இதற்குச் சிறந்த தீர்வாகும்.. போதிய உடற்பயிற்சி மற்றும் திறந்த மனதுடன் பேசுதல் மூலமே ஆரோக்கியமான இளைய தலைமுறையை உருவாக்க முடியும்..!!












Click it and Unblock the Notifications