பங்குசந்தை ட்ரேடிங்கில் நஷ்டம்.. கடன் சுமையால் மரணம்.. ஆசை காட்டி உயிரை காவு வாங்கும் லோன் செயலிகள்
சென்னை: போலி லோன் செயலி மூலம் கடன் வாங்கி மிரட்டலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர். மோசடிக் கும்பலின் இலக்கே வாழ சிரமப்படும் சாமான்யன் தான். அவனை மிரட்டினாலும் பெரிதாக எதிர்ப்பு இருக்காது என்பது தெரிந்து மோசடி கும்பல் மிரட்டுவார்கள் என்று முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு கட்டுரை எழுதியுள்ளார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
பங்குசந்தை ட்ரேடிங்கில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவர் இரு நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொண்டார். வழக்கை விசாரித்த காவல்துறை கடன் சுமையால் மரணம் என வழக்கைக் கையாளுகிறார்கள். நண்பருக்கு 11 வயதில் மகன், ஐடி யில் பணிபுரியும் மனைவி என இயல்பான வாழ்வு, ட்ரேடிங் பரிவர்த்தனையில் எத்தனையோ இழப்பு மற்றும் லாபம் பார்த்தவர், இதற்காக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டார் என்பதில் அவரது குடும்பம் உறுதியாக இருக்கிறது. அவர்கள் நினைத்தது சரிதான்.

கடன் சிக்கலை சமாளிக்க, போலி லோன் செயலிகளில் சிறிய அளவில் பணம் வாங்கி மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார் நண்பர். மோசடிக் கும்பல் இவரது நிர்வாண மார்பிங் படத்தை அனுப்பி இதை உனது நண்பர்களுக்கு அனுப்பி மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டியிருக்கிறான். அது மட்டுமல்லாமல் உன் போனை ஹேக் பண்ணி இருக்கிறோம், உன் குடும்பப் புகைப்படங்கள் அனைத்தும் எங்கள் கையில் ! அவர்கள் தான் அடுத்த கட்ட மார்பிங் என திகில் கிளப்ப, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த நண்பர் இதன் பிறகே விபரீத முடிவை எடுத்திருக்கிறார். ஆனாலும் மிரட்டலில் மரணம் என்று எங்கும் வராது. பங்குசந்தையில் கவனமுடன் ஈடுபடுங்கள் என அரசு நகர்ந்து விடும்.
சில விஷயங்களை புரிந்து கொள்வோம். இந்த லோன் செயலிகள் உருவாக்கப்படுவதன் முக்கிய நோக்கமே பணம் பறிப்பது தான். மொபைலில் நிறுவியதும் நமது Contacts, Photos ஆகியவைகளைப் பெற அனுமதி கேட்கும். நாம் அவசரத்தில் Allow அழுத்திவிடுவதால் உடனடியாக இவை இரண்டும் அவர்கள் வசம் சென்று விடும். நாம் அம்மா, அப்பா, மேலதிகாரி, ஆபிஸ் என சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு செய்தி அனுப்பி முதல் தாக்குதல் நிகழும். இதுஎப்படி என யோசித்தால், போனை ஹே/க் செய்து விட்டோம் என மிரட்டுவார்கள்.
நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள், எங்களால் எதுவும் செய்ய முடியும் என நிறுவும் உளவியல் தாக்குதலே இது. உங்கள் போன் எல்லாம் ஹேக் ஆவதில்லை, நாம் அனுமதித்ததால் தான் புகைப்படம் நமது தொடர்புகள் லோன் செயலி மூலமாக அவர்களுக்கு கிடைக்கிறது.
இரண்டாம் கட்டம், மிக மலினமாக ஒரு நிர்வாண படத்தில் நமது தலையை மட்டும் ஒட்டி அனுப்புவார்கள். இந்தப்படம் நுட்பமாகக் கூட இருக்காது, பார்த்தாலே இது கட்டிங் ஒட்டிங் வேலை என்பது தெரியும். இதை பலருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டல் தொடரும். இதற்கு அடுத்த கட்டமாய் குழந்தையை கடத்தி விடுவேன் என மிரட்டிய சம்பவமெல்லாம் கூட இருக்கிறது.
இதில் மிக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வாங்கிய பணத்தை திருப்பித் தந்தாலும் இந்த மிரட்டல்கள் தொடரும். காரணம் இவர்கள் நோக்கமே பணம் பறிப்பது தான். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே பணம் கொடுப்பார்கள். மோசடிக் கும்பலின் இலக்கே வாழ சிரமப்படும் சாமான்யன் தான். அவனை மிரட்டினாலும் பெரிதாக எதிர்ப்பு இருக்காது, அரசு, அதிகார வர்க்கம் எதுவும் உதவிக்கு வராது. ஒன்று பணத்தை தந்து விடுவான், இல்லை விபரீத முடிவுகள் எடுப்பான். கடன் சுமையால் மரணம் என வழக்கு மூடப்படும். ஆக கும்பலுக்கு பெரிய பயமோ பாதிப்போ இதுவரை இல்லை.
நண்பரின் குடும்பம் அழைத்த போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என விளக்கியிருக்கிறேன். எல்லாவற்றையும் கேட்டு விட்டு இறுதியாக அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை இதயத்தை கலங்கடித்தது. மோசடிக் கும்பலிடம் இருந்து நேற்றும் அழைப்பு வந்திருக்கிறது. அவர் இறந்து விட்டார் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
அவன் செத்தா என்ன ! நீ இருக்கீல்ல ! நீ பணத்தை கட்டுடி என மனைவியை மிரட்டியிருக்கிறார்கள். ஒரு எதிக்கல் ஹேக்கராக இந்த நாய்கள் யார் ! எப்படி செயல்படுகிறார்கள், இவர்களைத் தட்டி தூக்கும் விதம் எல்லாம் தெரியும். ஆனாலும் செய்ய முடியாத ஒரு வெறுமை இருக்கிறது. மோசடி கும்பலை நினைத்து பாருங்கள். இது போல துயரின் உச்சத்தில் இருப்பவர்கள் எத்தனை பேரை கீழ்த்தரமாக, எக்காளமாக மிரட்டியிருப்பார்கள்.
நான் தான் பெரிய சக்தி ! தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற அகங்காரத்தை எப்படி எப்போது அடக்கப்போகிறோம், தெரியவில்லை. பல கட்டுரைகள், காணொளிகள் செய்து விட்டேன். விழிப்புணர்வை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும். செய்வேன் என்று பதிவிட்டுள்ளார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
அவரது பதிவிற்கு முகநூல் பதிவர்கள் குறிப்பாக போலி லோன் ஆப் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications