தாமரை எம்ஜிஆர் கொடுத்த சின்னம்.. ஜெ. விசுவாசிகள் பாஜகவை ஆதரிக்க வேண்டும்.. கேபி ராமலிங்கம் தடாலடி!
சென்னை: தாமரை சின்னம் எம்ஜிஆர் கொடுத்த சின்னம். எம்ஜிஆர் தொண்டர்களும், ஜெயலலிதாவின் தொண்டர்களும், பாஜகவை ஆதரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக நிறுவனத் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைப் பாராட்டி பேசினார்.

எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரத்தை கொடுத்தவர். எம்ஜிஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன். அவர்கள் திமுக போல குடும்ப அரசியல் செய்யவில்லை எனப் பேசினார் பிரதமர் மோடி.
அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் எம்ஜிஆர்,ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா ஊழல் செய்ததாலேயே தண்டிக்கப்பட்டார் என கடந்தாண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது, பாஜக அதிமுக கூட்டணியில் கடும் விரிசலை உண்டாக்கியது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி, பல்லடத்தில் பேசும்போது ஜெயலலிதாவை புகழ்ந்தார்.
அதிமுக வாக்கு வங்கிக்கு குறி: அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா அபிமானிகளின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்புவதற்காக மோடி இவ்வாறு எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசி இருக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வர விரும்பியே மோடி இவ்வாறு பேசி இருக்கிறார் என்றும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கத்திடம் பிரதமர் மோடி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கேபி ராமலிங்கம், "பிரதமர் மோடி எப்போது எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் நிந்தித்து பேசினார்? எப்போதுமே பிரதமர் மோடி நீண்டகாலமாக ஜெயலலிதா அரசியலை கவனித்திருக்கிறார். அவருக்கு பிடித்திருக்கிறது, புகழ்ந்து பேசி இருக்கிறார்.
எம்ஜிஆர் தாமரை கொடி: எம்ஜிஆர் தொண்டர்களும், ஜெயலலிதாவின் தொண்டர்களும், பிரதமர் மோடி பேசுவதைக் கேட்டு, பாஜகவை ஆதரிக்கட்டும். திமுகவில் இருந்து விலகி அதிமுக எனும் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு எம்ஜிஆர் மன்றங்கள் ஏற்றிய கொடி தாமரைக் கொடி தான்.
1980ல் தான் பாரதிய ஜனதா கட்சி தோன்றியது. அதற்கு முன்பு ஜன சங்கமாக இருந்தபோது அதன் சின்னம் திருவிளக்கு சின்னம் தான். ஆனால், 1972லேயே எம்ஜிஆர் மன்றத்தின் கொடி தாமரைக் கொடி. தாமரை சின்னம் எம்ஜிஆர் கொடுத்த சின்னம். எம்ஜிஆர் அபிமானிகள், பாஜகவை ஆதரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், திமுகவில் இருந்து விலகிய காலகட்டத்தில், மதுரை நேதாஜி சாலையில் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் திரண்டு, கட்சிக் கொடி ஒன்றை ஏற்றினர். திமுகவின் கருப்பு சிவப்பு கொடியின் நடுவே தாமரை மலர் இடம்பெறும் கொடி தான் முதன் முதலில் ஏற்றப்பட்டது. பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது கருப்பு, சிவப்பு நடுவே வெள்ளை வட்டத்தில் அண்ணா உருவம் இடம்பெறுவதுபோல் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications