தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 26 ம் தேதி புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் 24 ஆம் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வரும் 26 ஆம் தேதி வாக்கில் புயலாகவும் மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போதில் இருந்தே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதன்பிறகு கனமழை தொடர்ந்து தமிழகத்தில் பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
அதற்கு ஏற்பவே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் இன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் காரணமாக இன்று காலை 8.30 மணியளவில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
புயலாக மாற வாய்ப்பு
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் 24 ஆம் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடையக்கூடும். இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 26 ஆம் தேதி வாக்கில் மேலும் தீவிரமடையக் கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதிக்கு பிறகு புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இது கென்யார் புயல் என்று அழைக்கப்படும். கென்யா புயலாக வலுப்பெற்றது என்றால், இது நகரும் திசையை பொறுத்து கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு ஆபத்தா?
தமிழகத்தின் வட கடலோரம் அல்லது ஆந்திர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படலாம். சென்னைக்கு பாதிப்பு இருக்குமா என்றால், வரும் நாட்களிலேயே இது தெரியவரும். அதை பொறுத்தே தமிழகத்தின் வழியாக கரையை கடக்குமா என்பது தெரியவரும். தற்போது தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications