எல்பிஜி வாடிக்கையாளர்கள் கேஒய்சி சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசியா? மீறினால் சிலிண்டர் நிறுத்தப்படுமா?
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என சமூகவலைதளங்களில் பரவும் செய்திக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் (இன்டேன்), பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டரை பெறும் வாடிக்கையாளர்களின் விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரிக்கின்றன. இவை ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கான இறுதிநாள் வரும் மார்ச் 31 என சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாளுக்குள் தங்கள் விவரங்களை தங்கள் கேஸ் ஏஜென்சிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியும் மெசேஜ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்ட போது தமிழகத்தில் 2.10 கோடி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
அவர்கள் உண்மையான வாடிக்கையாளர்களா என்பதை அறிய வேண்டி உள்ளது. போலிகளை கண்டறிந்து கையும் களவுமாக பிடிப்பதற்காகவே வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்துவிட வேண்டும். அப்போது வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். ஒரு வேளை கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே ஏஜென்சி ஊழியர்கள் சென்று விவரங்களை சேகரித்துவிடுவார்கள்.
எனவே இதற்கெல்லாம் இதுவரை எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எனவே சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர்கள் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஒரு எச்சரிக்கையும் எஸ்எம்எஸ் மூலம் வருகிறது. அதில் உங்கள் கேஸ் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் அட்டையுடன் கேஸ் ஏஜென்சிக்கு வந்து பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சிலிண்டர் பதிவு நிறுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications