Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் மறைவுக்கு "விடுதலைப் புலிகள்" போட்டி போட்டு இரங்கல்- ஈழ கொடியுடன் சென்னை வீட்டில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை இரங்கல் தெரிவித்துள்ளதாக ஈழத் தமிழர்கள், பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து இரங்கல் அறிக்கையை நேரில் கொடுத்தனர்.

விஜயகாந்த் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இரங்கல் தெரிவித்துள்ளதாக அரசியல் துறை பொறுப்பாளர் வி.ஜெயாத்தன் என்பவரது பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. இதனை ஈழத் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரிலான இந்த இரங்கல் அறிக்கை சென்னையில் நேற்று விஜயகாந்த் வீட்டில் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரிடம் ஈழத் தமிழர்கள் சிலரால் நேரில் வழங்கப்பட்டது.

LTTE Condoles demise of DMDK Founder Vijayakanth

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எப்போதெல்லாம் நியாயப்பாடுகளுடன் கூடிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்காக முழு உலகும் பாடுபடும். தமிழீழ போராட்டத்திற்காக தமிழகத்திலிருந்து எழுகின்ற ஆதரவுக் குரல்களும், உதவிகளும் காலம் காலமாக வெவ்வேறு தலைவர்களாலும், மக்களாலும் தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கிற விடயமாகும். அவ்வாறு தமிழீழப் போராட்டத்திற்காக இதயசுத்தியுடன் பல ஆண்டுகளாக ஒலித்து வந்த குரல் விஜயகாந்த்துடையது.

சிறந்த நடிகர், வெற்றிகரமான அரசியல் தலைவர், சிறந்த மனிதர், மிகச்சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர் என்கிற பல் பரிமாணங்களைக் கொண்ட அவரின் இழப்பு குடும்பத்தினர், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக, தமிழீழ மக்களுக்கும் பல்வேறு வழிகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனிப்பட்ட நலன்கள் மற்றும் தமது அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் தொடர்ச்சியாக தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவுக் குரலாக ஒலித்து வந்ததுடன் ஈழத் தமிழ் மக்கள் மேல் உண்மையான கரிசனை கொண்டிருந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் நடைபெற்றது 'இனவழிப்பு' என்பதனை வெளிப்படையாக பேசியிருந்தார்.

LTTE Condoles demise of DMDK Founder Vijayakanth

தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பல்வேறு வழிகளிலும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிய போதும் தமது தாயக விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழ் மக்களுக்கு விஜயகாந்த்தின் மரணம் ஈடுசெய்ய முடியாததாகும். இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் ஒரு இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்கள் 28.12.2023 அன்று சாவடைந்துள்ளார் என்ற செய்தி, தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே தமிழ்மொழி மீது பற்றுக்கொண்ட விஜயகாந்த் அவர்கள், கல்விகற்கும் காலத்திலிருந்தே இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.

ஈழத்தமிழர்கள் மீது பேரன்பு கொண்ட விஜயகாந்த் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து வந்ததோடு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

''போராடடா ஒரு வாளேந்தடா" எனும் பாடல் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழீழத்து இளையோர்களின் மனங்களில் இடம்பிடித்ததோடு, இனவெறிச் சிங்கள அரசின் வன்முறையை எதிர்த்துப் போராடத்துணிந்தவர்களது மனங்களில் புரட்சித்தீ வளர உந்துவிசையாகவும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

LTTE Condoles demise of DMDK Founder Vijayakanth

நூற்றைம்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் அவர்கள், 1999ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த காலங்களில் பல திரைப்படக்கலைஞர்களைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாகச் செயற்படவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பினைக் கண்டித்து 19.05.2009 அன்று, மிகத் தெளிவான அறிக்கை ஒன்றினை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில், தமிழீழ மக்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்பதனைச் சுட்டிக்காட்டியதோடு, துணைநின்ற இந்திய மத்திய அரசினையும் மிகத்துணிவோடு கண்டித்திருந்தார்.

2011ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அவர்கள் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைமாமணி விஜயகாந்த் அவர்களது இழப்பு, ஈடுசெய்ய முடியாதது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அவரது திரையுலக இரசிகர்களுக்கும் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அனைவரது துயரிலும் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+