மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்- போரை நிறுத்துங்கள் புதின்: வைரமுத்து
சென்னை: உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்தது; உக்ரைனில் உள்ள ரஷ்ய தேசிய இன மக்கள் வசிக்கும் 2 மாகாணங்களை இறைமையுள்ள சுதந்திர பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் ஆகியவற்றை முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
கடந்த 2 வாரங்களாக இந்த யுத்தம் நீடித்து வருகிறது. உக்ரைனில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த நிலத்தை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நேரடியாக யுத்த களத்துக்கு வர முடியாது என கைவிரித்துவிட்டன. அதேநேரத்தில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அடுத்தடுத்து விதித்தும் வருகின்றன.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம் விலை உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்துவிட்டன. ரஷ்யாவின் உக்கிரமான யுத்தத்தால் உக்ரைன் சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்:
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.