மூங்கில் மரத்துல முள்ளு பழுக்குமா? பழங்குடியினரின் துயரத்தை விளக்கும் வைரமுத்து! சிலாகித்த தேவா
சென்னை: மலைவாழ் பழங்குடியின மக்களின் துயர பாடல் ஒன்றை இசையமைப்பாளர் தேவா தனது உயிருடன் கலந்து பாடினார் என பெருமிதம் பொங்க கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பாடல் ரெக்கார்டு செய்யப்பட்டதையும் வீடியோவாக எடுத்து ஒலிபரப்பியுள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மலைவாழ்
பழங்குடி மக்களின்
துயரப் பாடலொன்று

காட்டுமுள்
கிழித்த மாமிசத்தில்
வழியும் இரத்தம்
தேவா
உயிர்கலந்து பாடினார்
ஒலிப்பதிவில் உடனிருந்தேன்
பாலசுப்ரமணியம் இசை
தமிழ் தயாளன் இயக்கம்
"மா மலையே - எங்க
மலைச் சாமியே
ஓம் மடியில் - எங்க
உசுரு கெடக்குதே
இத்துப்போன சாதிசனம்
என்னைக்காச்சும் வாழுமா?
மூங்கில் மரத்துல - உள்ள
முள்ளு பழுக்குமா?"
இந்த
ஒலிப்பதிவின்
ஒளிப்பதிவு
உங்கள் கலைக் கண்களுக்கு
இவ்வாறு வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பாடல் குறித்து வைரமுத்து, தேவாவிடம் விளக்கும் காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தேவாவிடம் கூறுகையில், இந்த படமே ஒரு பிரசவத்தை பற்றிய படம். மலை வாழ் மக்களுக்கு மருத்துவமனை இல்லை, விஞ்ஞான வசதி இல்லை.
இங்க நாய், நரி, பூனையெல்லாம் குட்டி போடுதே, ஒரு புள்ளத்தாச்சியால் குழந்தையை தானே பெற்றுக் கொள்ள முடிகிறதா, மிகவும் முக்கியமான விஷயம் மிருகங்களுக்கு இருக்கும் வசதி, மனிதர்களுக்கு இல்லை. எங்கயாவது நாய், நரி, யானை, மான், பூனைகளுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனைகள் இருக்கிறதா.

ஒரு யானைக்கு இன்னொரு யானை போய் பிரசவம் பார்க்குமா? அது இயல்பாக இருக்கிறது, மனித வாழ்க்கை மாறி போச்சு. மூங்கில் மரத்தில் உள்ள முள்ளு பழுக்குமா? மூங்கில் மரத்தில் உள்ள முள்ளு பழுத்தால் மிகவும் வீரியமாக துன்பத்தையே கொடுக்கும். மூங்கில் மரத்து முள் என்றைக்காவது கனியாகுமா? என விளக்கியபடியே ரெக்கார்டிங் நடந்த வீடியோவை வைரமுத்து வெளியிட்டுள்ளார். தனது கணீர் குரலிலே தேனிசை தென்றல் தேவாவும் பாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications