"அன்பு" மறைந்திருக்கலாம்.. உன் அன்பு.. எப்போதும் உள்ளிருக்கும்.. மகனுடன் மா.சுப்பிரமணியம்!
சென்னை: ஒவ்வொரு பிரிவும் வேதனையானது.. அதுவும் உயிர் பிரிந்து போகும்.. அதை விட முக்கியமாக.. நம்முடைய உணர்வுக்குள் உயிராக இருந்த ஒரு உறவு நம்மை விட்டு நிரந்தரமாக பிரியும்போது வரும் வேதனையும், சோகமும் அளவிட முடியாதது.. தாங்கிக் கொள்ளமுடியாத துயரம் அது.
அப்படிப்பட்ட ஒரு சோகத்தைத்தான் இன்று மா. சுப்பிரமணியம் தம்பதியினர் சுமந்து நிற்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயலாத ஒன்று.. காரணம் எந்த ஆறுதலாலும் அவர்களின் வலியை போக்க முடியாது.. அவர்களுக்கு வலி நிவாரணமாய் இருந்து வந்த அந்த அன்பு இன்று அவர்களிடம் இல்லை.
மனதின் வலிகள்
எத்தனையோ வலிகள் வந்தபோதெல்லாம்.. தன் சிரிப்பால் அந்த வலிகளைப் போக்கிய தங்கள் செல்ல மகனை இழந்து நிற்கிறார் மா.சு. அவரை விட அவரது மனைவியின் மனது பட்ட வேதனை எப்படி இருக்கும் என்பதை யோசிக்கும்போதுதான் நமக்கும் சேர்த்து வலிக்கிறது. எப்போதுமே தந்தையை விட தாய்க்குத்தான் பிள்ளைகள் மீது பாசம் ஒரு படி அதிகமாக இருக்கும்.. அந்த வகையில் மகனின் இழப்பால் அந்தத் தாய் படும் வேதனையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
கேட்டவர்களுக்கு உதவி
ஓடி ஓடி ஒவ்வொருவருக்கும் உதவி செய்பவர் என்றால் அது மா.சுதான்.. அவரது கொள்கை வேறு, கட்சி வேறு என்றாலும் கூட அவரிடம் உதவி என்று யார் வந்தால், எவர் வந்தாலும் இறங்கிச் செய்யக் கூடியவர். மனது புண்படும்படி யாரையும் பேசாத பண்பாளர்.. இன்னும் இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன மா.சுவிடம்.. மாசே இல்லாத மனசுக்காரர்.. அவரது இளைய மகன்தான் அன்பழகன்.
எல்லோருக்கும் செல்லம்
எல்லோருக்கும் செல்லமாக அன்பு.. படைப்பில் ஏற்பட்ட கோளாறாக வந்து பிறந்தாலும் அந்த புன் சிரிப்பால் அத்தனை பேரையும் வசீகரித்து வந்தார் இந்த 34 வயதுக் குழந்தை அன்பு. மாசுவும் அவரது குடும்பத்தினரும் அன்பு மீது பொழிந்த பாசமும், நேசமும் கூட இருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட மகனைத்தான் கொரோனாவிடம் பறி கொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மா.சு குடும்பத்தினர்.
மீள வேண்டும் விரைவில்
தனது செல்ல மகனின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மா.சு. தனது மகனின் நான்கு புகைப்படங்களைப் போட்டு தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். பார்க்கவே மனசு துடிக்கிறது. யாருக்குமே வரக் கூடாத சோகம்.. புத்திர சோகம் என்பார்கள். நாம் இருக்க.. நம் கண்முன்பே நாம் வளர்த்த பிள்ளையைப் பறி கொடுப்பது போல வேறு என்ன துயரம் வந்து விடும்.. எதிரிக்கும் கூட அப்படிப்பட்ட சோகம் வரக் கூடாது என்று சொல்வார்கள். அத்தகைய சோகத்தைத்தான் இன்று மா.சு எதிர்கொண்டுள்ளார்.
மகனுடன் விளையாட்டு
முதல் படத்தில் தனது செல்ல மகனுடன் ஜாலியாக விளையாடுகிறார் மா.சு. கையை நீட்டி பொய்யா டிஷ்யூம் டிஷ்யூம் போடுகிறார்.. மகனின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம் பாருங்கள்.. அப்பாவை வென்று விட்டேன் என்ற பெருமிதமா அல்லது எப்போதும் ஊருக்காக ஓடிக் கொண்டிருக்கும் அப்பா எனக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் ஜாலியாக விளையாடுகிறார் என்ற சந்தோஷமா என்று தெரியவில்லை.. ஆனால் அன்பு மனதில் நிறைந்து வழிந்தோடுகிறது சந்தோஷம்.
ஹலோ யார் பேசுறது
அடுத்த புகைப்படம் இன்னும் ஜாலியானது.. அப்பாவும் பிள்ளையும் ஜாலியாக போன் பேசுகிறார்கள். பொய் பொன்தான்.. ஆனால் மகனுக்கு அதுதான் சந்தோஷமே.. ஹலோ யார் பேசுறது.. நான்தான் அன்பு பேசறேன்.. என்ன பண்றீங்க.. உங்க கூட பேசிட்டிருக்கேன்.. நீங்க இப்படியே என் கூடவே பேசிட்டு ஜாலியா விளையாடிட்டிருங்கப்பா.. இப்படிப் போயிருக்கலாம் இந்த செல்ல உரையாடலின் நீட்சி.. அன்புவின் முகத்தில் தெறிக்கும் அந்த சந்தோஷம் சொல்லும் அப்பாவின் அன்பை அந்தக் குழந்தை எப்படி அனுபவித்திருக்கும் என்பதை.
அம்மாவுடன் பிள்ளை
சரி அப்பா வெளியே கிளம்பிட்டேன்.. ஜாலியா விளையாடிட்டிருக்கணும்.. அம்மா கிட்ட சமர்த்தா இருக்கணும்.. வரும்போது என்ன வாங்கிட்டு வரணும் அன்புக் குட்டிக்கு.. என்று செல்லமாக சொல்லி விடை பெறுகிறாரா மா.சு.. அப்பாவும், பிள்ளையும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பூரித்து இருக்கும் அந்தத் தாயின் மனதில் எத்தனை வலி ஏற்படும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால்.. பார்க்கவே முடியவில்லை.. நமக்கே இவ்வளவு வலி என்றால் அந்தத் தாய்க்கும்.. தந்தைக்கும்!
ஆறுதல் பெற வேண்டும்
காலம் நம்மிடம் சில நேரம் விளையாடிப் பார்க்கும்.. அந்த விளையாட்டிலிருந்து யாரும் தப்ப முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கஷ்டத்தை ஒவ்வொரு கட்டத்திலும் கொடுக்க அது தவறுவதில்லை. ஆனால் யாருக்கும் வரக் கூடாத கஷ்டம் இன்று மா.சு குடும்பத்தினருக்கு வந்துள்ளது. அன்பு மகனின் இழப்பிலிருந்து மா.சு. வேகமாக மீண்டு வர வேண்டும். அன்பு போன்று எத்தனையோ பிள்ளைகள் அரவணைப்புக்காக காத்திருக்கின்றன.. அதற்காக அவர் ஏதாவது செய்ய வேண்டும்.. நிச்சயம் ஏற்கனவே அவர் செய்து கொண்டுதான் இருப்பார்.. ஆனால் இனி பிரமாண்டமாக அவர் செய்யும்போது நிச்சயம் அன்பழகனின் ஆத்மாவும் நிம்மதி அடையும்.. !