சென்னையில் பரவும் காய்ச்சல்.. மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சேதி!
சென்னை: மழை தொடங்கிய பிறகு ஒன்றிரண்டு பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலே அப்பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், மழைக்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ளது. சளி, இருமல், தலைவலி, தொண்டை வலி, உடல் சோர்வு போன்றவை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறி என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு தொற்று நோய் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடிய காய்ச்சல் எனவும் கூறியுள்ளனர்.
சென்னையில் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் காய்ச்சல் 10 நாட்களில் சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், வைரஸ் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மழை தொடங்கிய பிறகு காய்ச்சல் பாதிப்பு ஒன்றிரண்டு பேருக்கு வந்தாலே அப்பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பு, லேசான மழை பெய்தாலே பல மருத்துவமனைகளுக்குள் மழைநீர் வரும். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் அந்தக் குறை அகற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 ஆயிரம் மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் மழைநீர் தேக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications