2 முறை குண்டாஸ்... பாஜக கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன்,இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கடந்த அக்டோபர் மாதம் தேதி கைது செய்தது. கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது கைது செய்ய வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் கல்யாணராமனும் பாஜகவினரும் ஈடுபட்டனர்.

கல்யாணராமன் மீது 2 குண்டாஸ்
பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு முறை கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். மீண்டும் 2-வது முறையாக அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

ரத்து கோரி வழக்கு
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டனர் நீதிபதி.

உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்
மேலும் மனுதாரர் கல்யாணராமன் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார்; சட்டத்தை மதிக்க மாட்டார் என்று சரமாரியாக விளாசினார். அத்துடன் கல்யாணராமன் என்ன அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என கண்டனம் தெரிவித்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா. அப்படியான நபர் தம் மீதான புகாரை மட்டும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

டிஸ்மிஸ் செய்க
இதற்கிடையே மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அந்த மனுவில் ஏற்கனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் கல்யாணராமன் பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை என்றும் இவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மத மோதலை உருவாக்கும் விதமாக பேசுவதால் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான் என்றும் எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோபிநாத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications